Dr D.Ravikumar MP 리트윗함

மக்கள் நீதி மய்யம்
தேர்தலில் போட்டியிடவேண்டும்!
'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்
முழுமையுற வேண்டும்!
மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
------------------
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும்.
மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம்.
கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம்.
நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும்.
இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம்.
அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும்.
(1/2)




தமிழ்





















