தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
தலைநகரிலேயே தலைவிரித்தாடும் அரிவாள் கலாச்சாரம் - திமுக காபந்து அரசின் நிர்வாகத் தோல்வி!
தன் தங்கையை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன் மற்றும் தந்தை மீது, ஒரு கும்பல் அரிவாளால் வெறித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, களத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த 'விடியா அரசு' போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவை இன்று ரத்தச் சகதியில் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
காவல்துறையின் கைகள் அரசியல் தலையீடுகளால் கட்டப்பட்டிருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, இன்று ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையானது.
பெண்களுக்குப் பாதுகாப்பு, சமூக நீதி என்று மேடைக்கு மேடை முழங்கும் இந்த திமுக அரசு, ஒரு பெண்ணைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட குடும்பத்திற்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதுதான் உங்கள் 'திராவிட மாடல்' ஆட்சியா? சாமானிய மனிதன் தன் குடும்பத்தைப் பாதுகாக்க வீதியில் இறங்கினால், அவனுக்கு அரிவாள் வெட்டுதான் பரிசா?
முதலமைச்சர் அவர்கள் வெறும் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு, சென்னை மாநகரத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, சென்னையில் நிலவும் அரிவாள் கலாச்சாரத்தை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசுக்கு மறக்க முடியா பாடத்தை மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.