
ss
81 posts


@googlemaps I have been facing problem for the last two months when using through Android auto or directly through mobile app while driving, it get stuck at initial point with GPS signal lost, am using Blaupunkt Jamaica 990. Updated Android auto in the system to the latest still same
English
ss retweetou

Based on latest available data (mostly 2025, verified from multiple sources like PIB, The Hindu, Wikipedia):
- Delhi: ~18,400 passengers/km/day (6.5M total, 353 km)
- Mumbai: ~10,600 (0.85M, 80 km)
- Bengaluru: ~10,400 (1M, 96 km)
- Kolkata: ~9,600 (0.7M, 73 km)
- Hyderabad: ~9,000 (0.6M, 67 km)
- Pune: ~6,500 (0.2M, 31 km)
- Jaipur: ~4,200 (0.05M, 12 km)
- Chennai: ~3,700 (0.2M, 54 km)
- Lucknow: ~3,000 (0.07M, 23 km)
- Kochi: ~2,900 (0.08M, 28 km)
- Ahmedabad: ~2,200 (0.15M, 68 km)
Figures may vary slightly in early 2026.
Eesti

“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு,
“என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு,
“ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார்.
முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”.
தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது போன்ற முகமன்களை நிறைய கடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அது எனக்கும் எதிரில் இருப்பவருக்கும் உவப்பானதொரு அனுபவமாகவே இருந்திருக்கிறது.
பொற்சுடருக்கு முன்னர், பெயர் குறித்த உரையாடல் நிகழ்ந்தது எங்கே என்பது, அந்த உரையாடல் நடந்த ஞாயிற்றுக்கிழமை வெயிலின் அனலோடு நினைவிருக்கிறது. 200 அடி ரேடியல் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில் காரை நிறுத்தி இறங்கி நின்று கொண்டிருந்தேன். பங்க்கின் ஓரத்தில் நடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகள் கிழக்கே இருந்து அடித்த அனல் காற்றில் திணறிக் கொண்டிருந்தன. யாரையும் காணாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, தனது உருவத்திற்கு சற்றும் பொருந்தாத டீ சர்ட், பேண்ட், பூட்ஸ் அணிந்து, பில்லிங் கவுண்ட்டர் அறையிலிருந்து இறங்கினாள் அந்தப் பெண். வெயிலுக்காக தலை குனிந்து, தொப்பியை சரி செய்தவாறு என்னை நோக்கி நடந்து வந்தாள். அருகே வந்தவுடன்.
“பெட்ரோல், டேங்க் ஃபுல்” என்றேன்.
எந்த சுரத்துமில்லாமல்,
“ஜீரோ பாத்துக்கங்க” என்று ஆள்காட்டி விரலை டெர்மினலைக் நோக்கிக் காண்பித்து விட்டு, பெட்ரோல் போடத் தொடங்கினாள்.
தலையில் இருந்த கேப்-ஐ கழற்றி, வியர்வையை துடைக்க முயன்றவள், தனது நீளமான ஒற்றைச் சடையை கேப்பின் பின்பக்க லூப்பில் சிக்கிக் கொள்ள,
“இது வேற” என்று சன்னமான குரலில் அங்கலாய்த்தவாறு மறுபுறம் திரும்பினாள்.
பெட்ரோல் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து ருசித்தேன். “மந்திரப்புன்னகை” திரைப்படத்தின் வசனமொன்று நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் வாசனையை நுகரும் போதெல்லாம் இந்த வசனம் நினைவுக்கு வருவது, கரு.பழநியப்பன் எழுதிய சொற்களின் ஆயுளை மேலும் ஒரு முறை நீட்டிக்கிறது. “டக்” என்ற சத்ததோடு பெட்ரோல் கன் கட்-ஆஃப் ஆனதை நான் சட்டை செய்யவில்லை.
“கேஷா..கார்டா சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
“கேஷ் தர்றேன்” என்றவாறு, சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை நீட்டினேன்.
மூன்று முறை எண்ணினாள். ரூபாய் நோட்டுக்களை தனது கண்டக்டர் பையினுள் வைத்து விட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக தன் சிறிய கைகளால் துழாவிக் கொண்டிருந்தாள். சில்லறையை எடுக்க திணறிக் கொண்டிருந்தவளைப் பார்க்கையில், ஊர் டவுன் பஸ்களில், எந்தப் பிடிமானமும் இல்லாமல், படியில் நின்றவாறு, ஒரு கையால் தோல்பையினை உலுக்கி, ஒரே தடவையில், இரண்டு நாலணாக்களையும், ஒரு ஐம்பது காசையும் ஒரே சேர எடுத்து சுழற்றிக் கொடுக்கும் கண்டக்டர்கள் நினைவில் வந்து போனார்கள்.
“இந்தாங்க சார்” என்று அவள் மீதிப் பணத்தை நீட்டும் போது தான், அவளது ஐடி கார்டில் இருந்த பெயரப் பார்த்தேன்.
“செம பேரு போங்க” என்றேன்.
“எங்க அப்பா வச்ச பேரு சார்”, என்றாள் சிறிய சிரிப்புடன்.
“வீட்ல அரசின்னு கூப்டுவாங்களோ” என்று கேட்டதற்கு,
“எப்டி சார் ?” என்று புருவத்தை உயர்த்தினாள்.
“மக பேர்ல ‘அரசி’ங்கிற வார்த்தை இருக்கும் போது, எந்த அப்பா அம்மா வேற பேர் சொல்லிக் கூப்ட போறாங்க ?” என்றேன்.
“எப்பவும் ராணி மாதிரி இருக்கணும்னு நினைச்சு இந்தப் பேரை வச்சாராம். ஆனா பெட்ரோல் தான் போட்டுட்டு இருக்கேன்” என்று சிரித்தாள்.
“திருநெவேலி பக்கமா” என்றேன்.
“ஆமா சார்…நீங்களுமா” என்றாள்.
“இல்லல்ல..கொஞ்சம் கிட்டதான்.. உங்க பக்கம் நிறைய தில்லைன்னு பேரு வச்சு கேள்விப்பட்டிருக்கேன். சாமி பேருல்ல ” என்றதற்கு.
“ஆமா சார்” என்றாள்.
“சரி..பாப்போம்” என்று விலகி காரை நகர்த்தினேன். பெட்ரோல் பங்க்கின் எக்ஸிட் அருகே சென்று ஏர் செக் செய்து கொண்டிருந்த போது திரும்பிப் பார்த்தேன். டெர்மினல் அருகே நின்று, தனது தொப்பியில் சிக்கிய ஒற்றைச் சடையை எடுக்க போராடிக் கொண்டிருந்தாள், “தில்லைக்கரசி”.
பொற்சுடருயும் தில்லைக்கரசியும் நினைவுக்கு வந்தது, நிறைய பெயர் சார்ந்த உரையாடல்களை எழுதப் பணித்தது. பிடாங்கு, முப்புடாதி, பாபநாசம் போன்ற அத்தனை பெயர்களையும் மீறி நினைவின் படிமங்களில் இருந்து மேலேறி வருவது ஒரு பெயர் தான். உத்தராக்கண்ட் மாநிலத்தின் ஒரு மலைக்கிராமத்தில் தான் அந்தப் பெயர் எனது மனதில் ஆழப்பதிந்தது.
கல்லூரி முதல் செமஸ்டரின் போது பெரிதாக நண்பர்கள் அமைந்திருக்கவில்லை. படிப்பில் ஈடுபாடில்லாமல், எந்த நோக்கமும் இன்றி விட்டேத்தியாக சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என்சிசி-யில் சேர்ந்திருந்தேன். வடக்கே தேசிய அளவிலான ஒரு கேம்ப்புக்கு தேர்வாகியிருந்த சீனியர்கள் இருவர் செல்ல முடியாமல் போக, எங்கள் பேட்ச்சில் இருவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பற்றிக் கொண்டேன். தமிழ்நாட்டில் இருந்து பதினோரு பேர் மட்டும் சென்றிருந்தோம். பதினோரு பேரும் திருநெல்வேலி, மதுரை பக்கத்து ஆட்கள். உத்தராக்கண்ட்டில் நைனிதால், பீம்தால், சாத்தால், கெளசானி பக்கம் இருந்த மலைகளைக் கடக்க வேண்டியிருந்த டிரெக்கிங் கேம்ப் அது. காலையில் எழுந்தவுடன், தூரத்தில் தெரியும் ஒரு மலையைக் காண்பித்து அங்கே போகச் சொல்லி விடுவார்கள். மதிய உணவுக்கு, ஒரு சருவத்தாளில் இரண்டு சப்பாத்திகளும், வெங்காயமும் கட்டிக் கொடுப்பார்கள். சூரியன் மறைவதற்குள் அடுத்த இடத்தில் இருக்கும் கேம்ப்பை சென்றடைய வேண்டும். இது போல நாளைக்கு ஒரு கேம்ப் என்று மாறிக் கொண்டே இருக்கும்.
பயம் ஒன்றுமில்லை, சாலை வழியாகவும், சிறிய கிராமங்கள் வழியாகவும் இலக்கை நோக்கி நடந்து கொண்டே இருக்க வேண்டியது தான். வெவ்வேறு மொழி, கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள், நல்ல ஷார்ப்பான ஆட்கள், திறமையானவர்கள், மோடுமுட்டிகள், அரை மெண்டல் குஸ்காக்கள், என்று பலதரப்பட்டவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்தது. பீகாரைச் சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு குஸ்காவிடம், எனக்கு சென்ட்ரி (Sentry) ட்யூட்டி வாய்த்த ஒரு நல்லிரவில், சிக்கிக் கொண்டேன். எனது ட்யூட்டியை அவனது ட்யூட்டி என்று தவறாக நினைத்துக் கொண்டு, “ஏன் நைட் வெளிய சுத்துற” என்று என்னிடம் ஒரண்டு இழுத்துக் கொண்டிருந்தான். அவன் இந்தியிலும், நான் தமிழிலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டதில் பஞ்சாயத்தானது. எனக்கு ஓரளவுக்கு இந்தி புரிந்து, அவன் திட்டியதில் கடுப்பாகி நான் சட்டையைப் பிடிக்க, அவனோடு இன்னொருவனும் சேர்ந்து கொள்ள சலசலப்பானது. நான் அடி வாங்க சில நொடிகள் இருக்கும் போது, எனக்கும் அவ்விருவருக்கும் இடையே அந்த அண்ணன் வந்து நின்றார்.
மாவட்ட கலரில், ஆறடி உயரத்தில், நரம்பாக இருந்தாலும் இரும்பாக இருப்பார். ஒட்ட நறுக்கப்பட்ட தலைமுடி, நீண்ட முகம், சற்றே ஒடுக்கு விழுந்த கன்னங்கள், உயர்ந்த கன்ன எலும்புகளோடு கூடிய கூரிய பார்வை கொண்டவர். Hunter’s eyes என்பார்களே, அதனுடைய சரியான உதாரணம் இவர்தான்.
இடது கையால என்னை பின்னுக்குத் தள்ளி,
“வெலகுலே” என்றவர், எதிரே எகிறிக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் தனது வலதுகையை வைத்து லேசாகத் தள்ளினார். இரண்டடி பின்னே சென்றான். ஆள்காட்டி விரலை மட்டும் அவனிடம் உயர்த்திக் காட்டினார். இருவரும் கப்சிப்பென்று அமைதியானார்கள். திரும்பி, என் தோளைத் தட்டி
“வாலே” என்று நடக்கத் தொடங்கினார். சற்று தூரம் நடந்த பின்னர், நேரே பார்த்தவாறு,
“செமக்க வாங்கிருப்ப. சண்டை போடணும்னு முடிவு பண்ணிட்டா, சண்டை போடணும். சும்மா கத்திட்டு இருக்கக் கூடாது, புரியுதாலே” என்று திரும்பி என்னைப் பார்த்தார். தலையாட்டினேன்.
அதிலிருந்து, டிரெக்கிங்கில், பெரும்பாலும் நானும் அவரும் சேர்ந்து நடப்பது வழக்கம். ஒரு நாள், நாங்களிருவரும் வேகமாக நடந்ததில், மற்றவர்களுக்கு வெகு தூரம் முன்னே சென்று விட்டோம். நல்ல வெயில். அன்று நாங்கள் ஏறிக் கொண்டிருந்த மலையில் சரியான சாலைகள் இல்லை. தார்ச்சாலை போடுவதற்காக, மானாவாரியாக நிரடி விட்டு, அப்படியே கிடப்பில் போட்டுருந்தார்கள். கற்களும் பாறைகளும் நிறைந்த அந்த சாலையில், தோள்களில் கிட் பேக்கோடு ஏறிக் கொண்டிருந்தோம்.
“எவனையும் காணும்லே, கொஞ்ச நேரம் நிப்பமா” என்றார்.
“பசிக்குது…எதாது ஊராப் பாத்து உக்காருவோம்ணே” என்றேன். மேலேறி நடக்கத் தொடங்கினோம்.
சற்று நேரத்திற்கு பின்னர், ஒரு சிறிய ஒரு குடியிருப்பை வந்தடைந்தோம். மலையின் உட்புறம் இல்லாமல், சாலையின் விளிம்பில் வரிசையாக வீடுகளை அமைத்திருந்தார்கள்.
“என்னண்ணே இப்டி கட்டிருக்காய்ங்க, அவசரத்துக்கு கொல்லப் பக்கம் போனா, குப்புறடிக்க பள்ளத்தாக்குலதான் டைவ் அடிக்கணும். பல் வெளக்காமயே செத்துருவாய்ங்களே” என்றேன்.
லேசாகச் சிரித்தவர்,
“அங்கன உக்காருவோம்” என்று அந்த வரிசையில் முதலில் இருந்த டீக்கடையக் காண்பித்தார்.
கடையின் வாசலில், கிட் பேக்கை தொப்பென்று கீழே போட்டேன்.
“பைய்ய ஒழுங்கா வைலே, இந்தக் கனத்த செமக்க மாட்டியோ” என்றபடி, அவரது கிட் பேக்கை ஓரமாக சாத்தி வைத்து விட்டு கடையின் அருகில் இருந்த முகட்டை நோக்கிச் சென்றார்.
“சாய் ?” என்று கேட்ட கடைக்காரரிடம், வேண்டாமென்று வேகமாக தலையாட்டிவிட்டு, ஒரு பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் மட்டும் வாங்கினேன்.
தமிழ்நாடு என்று தெரிந்து கொண்ட கடைக்காரர், நியூஸ் பேப்பரை காண்பித்து “சிஎம்..சிஎம்” என்றார். ஜெயலலிலதா படம் போட்ட அந்த இந்தி பேப்பரில் இருந்து, செல்வம் என்றொருவர் புதிய முதலமைச்சராகிறார் என்ற செய்தியை மட்டுமே என்னால புரிந்து கொள்ள முடிந்தது..
கடைக்கு அருகே இருந்த சிறிய முகட்டில் அண்ணன் அமர்ந்திருந்தார். அவரின் அருகே சென்று அமர்ந்தவாறு,
“யாரோ செல்வம்னு ஒருத்தரு புதுசா சிஎம் ஆயிருக்காராம்ணே நம்மூர்ல”, என்றேன்.
“அப்ப..அம்மா?” என்றார்.
“தெர்லண்ணே….அரெஸ்டு போல”, என்றவாறு பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டினேன்.
மொட்டை வெயிலில், முகட்டில் அமர்ந்து, கால்களைத் தொங்கப்போட்டவாறு, பள்ளத்தாக்கை வேடிக்கைப் பார்த்தபடி ஆளுக்கொரு பார்லே-ஜி பிஸ்கட்டை மென்று கொண்டிருந்தோம்.
“இன்ஜினியரிங் தான படிக்க…நீ எதுக்குலே இந்த கேம்ப்புக்கு வந்து கஷ்டப்படுத ?” என்று கேட்டார்.
“கஷ்டம்லாம் இல்லண்ணே, காலேஜுக்கு இது பரவால்ல” என்றதற்கு சிரித்தார்.
“நீங்க எதுக்கு வந்தீங்க” என்றேன், அடுத்த பிஸ்கெட்டை எடுத்தவாறு.
“மிலிட்டரிக்கு போணும். என்சிசி சி சர்டிபிகேட் இருந்தா லேசா இருக்கும்” என்றார்.
“எதுக்குண்ணே மிலிட்டரிக்கு போறீங்க, வேற நல்ல வேலைக்கு போலாம்ல”, என்றேன்.
“வீடு இருக்க நெலமைக்கு நா திருநெவேலி வரைக்கும் வந்து படிக்கதே பெருசுலே. ஸ்போர்ட்ஸ் கோட்டானால ஹாஸ்டல் அப்டி இப்டின்னு ஓடுது. இந்த வருசத்தோட படிப்பு முடியுது. மத்த வேலையெல்லாம் எத்தன நாள்ல கிடைக்கும்னு உறுதியில்ல. இதுனா அடுத்த வருசம் செலக்சன் வரும். ஒரே அட்டெம்ட்ல போயிட்டா, பிரச்சனையில்ல. இதுக்கு மேல வீட்டை சிரமப்படுத்த முடியாது”. என்றார்.
“அப்பா..விவசாயமாண்ணே”,
“ம்ம். நெலம் கெடக்கு. ஆனா காட்டை மட்டும் நம்பி இருக்க முடியாதுல்ல. அக்கா தங்கச்சிக்கு எடுத்து செய்ய அது மட்டும் தான் இருக்கு.” என்றார்.
அதுவரையில் பொருளாதார ரீதியாக எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்திருந்த எனக்கு அந்த பதில் அத்தனை அதிர்ச்சி அளித்தது. இராணுவத்திற்கு செல்வதற்கு நாட்டின் மீது கொண்ட பற்றின் அளவுக்கு, வறுமையிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்திட வேண்டும் என்கிற வெறியும் காரணம் என்ற புரிதல் எனக்குக் கிடைக்க, நான் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைமுகடு வரை செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் புரிதல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இன்று வரையில், அலுவலக வேலை, நேர்காணல்கள் என்று ஊழியர்கள் சார்ந்த நிறைய முடிவுகளை பரிவுடன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருப்பதற்கு, மலைமுகட்டில் நடந்த அந்த உரையாடலும் ஒரு காரணம்.
கேம்ப்பின் மீதி நாட்கள் எனக்கு அவரது நிழலியே கழிந்தன. அவரது நிதானமும், பொறுப்புணர்வும் அவர் மீதான மரியாதையையும் அன்பையும் அதிகப்படுத்தியிருந்தன. கேம்ப் முடிந்த பிற்பாடு அவரவர் வழியில் சென்று பிறகு, தொடர்புக்கு சாத்தியமில்லாமல் போக, அந்த அண்ணனை அதன்பிறகு பார்க்கவில்லை. எப்போதாவது நண்பர்கள் யாரிடமாது கதை பேசும் பொழுது, அவரையும், அவரது பெயரைப் பற்றியும் பேசுவதுண்டு. அந்தந்த நேரத்து நினைவுகளோடு சரி.
பல வருடங்கள் கழித்து, “கர்ணன்” படம் பார்த்த பொழுது, அந்த அண்ணனின் பெயர் குறித்த வசனம் ஒன்றை கவனிக்க நேர்ந்தது. அந்த அண்ணன் திருநெல்வேலிக்காரர் என்பதும், ஊரை விட்டு வெளியேறி மேடேற, இராணுவத்துக்கு செல்வது தொடர்பான காட்சிகள் அந்தப் படத்தில் அமைந்திருந்ததும் நிறைய ஒத்துப் போனது. படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் ஒரு நாள் போனில் பேசும் போது,
“யாரை நினைச்சு இந்த பேரை வச்சீங்க ? உங்களுக்கு தெரிஞ்சவங்களா ? எனக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு என்சிசில இருந்தாரு. கண்டுபுடிக்க முடியுமா” என்று கேட்டு டிரெக்கிங் கேம்ப் கதையைச் சொன்னேன்.
“எங்க ஊர்ப்பக்கம் இந்தப் பேருல நிறைய இருப்பாங்களே, நிறைய மிலிட்டரிக்கும் போவாங்க. இத மட்டும் வச்சுக் கண்டுபிடிக்க கஷ்டம்”, என்றார்.
அந்த அண்ணன் மிலிட்டரிக்கு வேலைக்குச் சென்றாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதும், மனம் அவரை ஒரு இராணுவ வீரராகத் தான் உருவகம் செய்து கொள்கிறது. இராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதும், அவர் நினைத்தது அவருக்குக் கிடைக்க வேண்டும் எனறு நான் ஆசைப்பட்டதும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
தனது ரோமியோ-ஜூலியட் நாடகத்தில், “What’s in a name ? That which we call a rose by any other name would smell as sweet” – என்ற வரிகளில் – வெறும் பெயரில் ஒன்றுமில்லை. ஒரு மனிதனின் எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்பதை ரோஜாப் பூவை உருவகமாகப் பயன்படுத்தி விளக்கியிருப்பார் ஷேக்ஸ்பியர். அது எனக்கு மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று. ஆனாலும், சில நேரங்களில் பெயர்களும் முக்கியம் தானே ? பெயர் இல்லாவிட்டால், நம்மிடம் என்றோ ஒரு நாள் கரிசனம் காட்டிவிட்டு கண்ணுக்குத் தென்படாத தூரம் சென்று விட்ட நல்லுள்ளங்களை வேறு எதை வைத்து நாம் அடையாளப்படுத்த முடியும் ?
சமீபத்தில் “தென்னாடு” பாடலில் நடிகர் பசுபதியை பார்த்ததும் அந்த அண்ணன் குறித்த நினைவுகள் மனதை ஆக்கிரமத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அந்த அண்ணன் நினைத்ததெல்லாம் ஈடேறி, இராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பியிருந்தாலோ அல்லது ஊரிலேயே சம்சாரியாக இருந்திருந்தாலோ, Bison படத்தில் வரும் பசுபதி தோற்றத்தில் தான் இருப்பார். உங்களுக்குத் தெரிந்து திருநெல்வேலி பக்கம் யாராவது, அதே தோற்றத்தில், தங்கள் நாற்பதுகளில் இருந்தால் சொல்லுங்கள்.
இந்த அடையாளத்ததை வைத்து கண்டுபிடிப்பது சிரமமானதாக இருக்கும் என்று தோன்றலாம். ஆனால், திருநெல்வேலி செயிண்ட் சேவியரில் படித்து, என்சிசியில் இருந்து, உத்தராக்கண்ட் கேம்ப்புக்கும் சென்று, இன்று தனது நாற்பதுகளில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு “ஊய்க்காட்டான்” எனும் அட்டகாசமான பெயர் வாய்த்திருக்கும் ?
தமிழ்

No Sugar Challenge ஏற்கனவே செய்தவர்கள் - இனி செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு சிறிய இலவச இணைய தளம் உருவாக்கி இருக்கிறேன். (ஏற்கனவே செய்த இணைய தளத்தின் தரவுகள் flush out செய்து விட்டேன்). nosugar என்று ரிப்ளை செய்யவும், சுட்டி அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.
#NoSugarChallenge #SayNoToSugar
Upplands-Väsby, Sverige 🇸🇪 தமிழ்

அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் ஆட்டோ ஒன் வேயில் பாய்ந்து வந்து, மூன்று சக்கரங்களும் அந்தக் கிடங்கில் இறங்காமல் லாவகமாக இடது புறம் ஒடித்து , OMR சாலையில் நுழைந்து அநாயசமாக சீறிச் சென்றார். சட்டென்று அடித்த பிரேக்கில் எனக்குத் தான் வயிற்றில் இருந்து ஒரு உருண்டை வாய் வரை வந்தது. உருண்டையோடு ஒரு கெட்ட வார்த்தையும் வர, இரண்டையும் முழுங்கிக் கொண்டேன். பின்னால் இருந்து வந்த இன்னோரு ஷேர் ஆட்டோக்காரர், கண்ணாடியைத் தட்டி,
“இப்டித்தான் சடன் பிரேக் போடுவியா…இடிச்சா என்னாகும் தெரியுமா”, என்றார்.
“சடனா போடுறதுக்குத் தான பிரேக் வச்சிருக்காங்க. பிரேக் அடிக்கிறதுக்கு முன்னாடி, உங்களுக்கு லெட்டர் போட்டுட்டா அடிக்க முடியும்” என்றதற்கு மையமாக பார்த்துவிட்டு மனதுக்குள் நாலு நல்ல வார்த்தை சொல்லிவிட்டுச் சென்றார். சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியோடு நகர்ந்தேன். கிடங்கைத் தாண்டியவுடன், லாஸ்ட் வேர்ல்டு திரைப்படத்தில் தாவி வரும் வித விதமான டைனோசர்கள் போல, ரைட் அண்டு ராயலாக ஒன் வேயில் சீறிப் பாயந்து வந்த டூ-வீலர்களை சமயோசிதமாக கையாண்டு, தப்பித்து ஆசுவாசப்படும் போதுதான் ரோட்டிற்கு இடப்புறம் இருந்த சிறிய சந்தின் முனையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.
இருபதாம் ஆண்டு நினைவு அஞ்சலி என்று அச்சடிக்கப்பட்ட அந்த எட்டுக்குப் பத்து ஃப்ளெக்ஸில் அடர்ந்த தாடி மீசையோடு சிரித்துக் கொண்டிருந்தார், ஆர்.சிவாஜி. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஓரிரு முறை இவரை இதே இடத்தில் ஃபிளக்ஸில் பார்த்திருக்கிறேன். அரசியலிலோ, பொது வாழ்விலோ இருந்தவராகத் தெரியவில்லை. மறைந்த ஒருவரை, இருபது வருடங்களாக அவரது குடும்பத்தினர் நினைவில் வைத்திருக்கலாம்தான். ஆனால், தொடர்ந்து பல வருடங்களாக நினைவில் வைத்து ஃபிளெக்ஸ் அடித்து தெரு முனையில் வைப்பது சற்று வித்தியாசமாகப் பட்டது. அன்போ நன்றியோ இவ்விரண்டில் ஒன்று மிகுந்திருக்காமல் ஒருவரை சுற்றத்தாரும் உறவும் இத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்து அங்கீகரிப்பது சாத்தியமில்லை. எப்போதும் தன்னை மையப்படுத்தியே சிந்திக்கும் மனம், என் காலம் முடிந்த பின்னர், என்னை யார் நினைவில் வைத்திருப்பார்கள், எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று யோசித்தது. சட்டென்று, நான் யாரை நினைவில் வைத்திருக்கிறேன் என்ற கேள்வி எழ, மனம் வெள்ளைப்பாட்டியை கண் முன் நிறுத்தியது. அடுத்த நொடி – அரைடவுசர், பனியன் அணிந்து எட்டு வயது சிறுவனாக, அந்த சிற்றூரின் அரசுப் தொடக்கப்பள்ளிக்கு எதிரே இருந்த வெள்ளைப்பாட்டியின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன்.
அந்த வீட்டின் ஓட்டுச்சாப்பை தாங்கி நின்ற குத்துக்கற்களில், வாசலுக்கு நேராக இருந்த குத்துக்கல் ஒன்றில் ஒற்றைக்காலில் சாய்ந்து நின்று, எதிரேயிருந்த காலியிடத்தில் கட்டிக் கிடந்த எருமை மாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். குறிப்பாக, அதில் இருந்த ஒரு பெரிய எருமை மாட்டின் மீது தான் எனது கவனம் இருந்தது. மற்ற மாடுகளாவது அவ்வப்போது வெளியே சென்று வருவதைப் பார்த்திருக்கிறேன். இது காலையில் இருந்து தின்பதை மட்டுமே சோலியாக வைத்திருந்தது. மற்ற மாடுகளை விட இது மட்டும் எப்போதும் கோபமாக இருப்பதாகத் தோன்றும். சராசரிக்கும் சற்றே பெரிய அளவிலான கொம்புகள் இருந்தது காரணமாக இருக்கலாம். வெறுமனே சாய்ந்து அமர்ந்து எதையாவது மென்று கொண்டே இருக்கும். சகதியும் சாணியும் உடம்பில் சேர்ந்து காய்ந்து ஒட்டி, கற்கள் பதித்து போல இருக்கும் அதனருகில் வேற்றாள் யாரும் சென்று நான் பார்த்ததில்லை. பள்ளி நாட்களில், தெருவோரத்தில் பிரைஸ் அட்டையும், ஜவ்வு மிட்டாயும் விற்கும் பாட்டி, அதனருகே ஒரு இரண்டி தள்ளி ஜவ்வு மிட்டாய் ஒட்டிய பலகையை வைத்திருப்பாள். பள்ளிக்கு எதிரே இருந்ததால், இடைவேளையின் போது, அந்த பாட்டியிடம் ஐந்து பைசா, பத்து பைசா கொடுத்து பிரைஸ் அட்டை கிழிக்க சிறுவர்கள் கூட்டமாக வருவார்கள். அப்போது மட்டும் பெருமூச்சு விட்டு, எழுவதைப் போல ஆக்சனைப் போட்டு பயமுறுத்தும். மற்றபடி அதனிடம் பெரிதாக எந்த அசைவும் இருந்ததில்லை.
எனக்கொரு ஆசை இருந்தது. எப்போதும் உட்கார்ந்தே இருக்கும் இந்த எருமை மாட்டினை ஓடிச் சென்று தாண்டிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. அதற்குத் தடையாய் இருந்தது ஒன்றே ஒன்று தான் – மாட்டிற்கு அந்தப் பக்கம் எருமைக் கன்றுகள் கட்டிப் போடுவதற்காக இருந்த ஒரு சிறிய கூரைச்சாப்பு. அதனுள் நான்கைந்து கன்றுகள் கட்டிக்கிடக்கும். மாட்டைத் தாண்டினால், அந்த நான்கு கன்றுகளுக்கு ஊடே தான் குதித்தாக வேண்டும். கன்றுகள் மிரண்டு விட்டால் சிக்கல். என்றைக்காவது கன்றுகள் இல்லாத போதுதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த நாள் அன்று வாய்த்திருந்தது.
கூரைச்சாப்பினுள் கன்றுகள் இல்லை. கண்கள் சொருக, தன் கோணலான வாயில் மாடு எதையோ மென்று கொண்டிருந்தது. தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. மாடு தன் கண்களை முழுதாக மூடிவிட்டால், ஓடிச் சென்று தாண்டிவிடலாம் என்று யோசித்தவாறுதான் தூணில் சாய்ந்து ஒற்றைக்காலில் நின்றிருந்தேன். மாடு கண்களை மூடியது. இன்னும் இரண்டொரு நிமிடங்கள் பொறுத்து ஓடத் தொடங்கலாம் என்று எண்ணி தூணில் இருந்து விலக எத்தனிக்கும் போது,
“விடியமின்ன எந்திச்சு ராமாயி வீட்டு எருமைய வேடிக்கை பாத்துட்டு இருந்தா வெளங்கவா ?. இதுல ஒத்தக்காலு வேற. ஒத்தக்கால்ல நிக்காத, வீட்டுக்கு ஆகாதுன்னு எத்தனை தடவை சொல்றது” என்று கீழவீட்டில் இருந்து ஞானம்பாட்டி கத்தியதில் மாடு விழித்துக் கொண்டது.
“வடை வாங்கிட்டு வந்திருக்கு. போயி ரெண்டத் தின்னுட்டு குளிக்கிற வழியைப் பாரு”, என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மாடு திரும்பி என்னைப் பார்த்தது. பின்னர் வழக்கம் போல மெல்லத் தொடங்கிவிட்டது. நல்ல வாய்ப்பைக் கெடுத்ததற்காக ஞானம்பாட்டியின் மேல் கோபம் வந்தது. சத்தம் கேட்டு வெள்ளைப்பாட்டி வீட்டினுள் இருந்து வெளியே வந்து, முந்தியில் கைகளை துடைத்துக் கொண்டே
“என்ன காலையிலயே கத்துறா” என்றார்.
“ஒத்தக் கால்ல நிக்கக் கூடாதாம்.வடையத் தின்னுட்டு குளிக்கணுமாம்.” என்று நகர்ந்தேன்.
“நீச்சத்தண்ணி உப்பு போட்டு தரவா, புடிக்கும்ல, கொண்டு வரட்டா” என்று கேட்கவும் எச்சில் ஊறியது. மனதே இல்லாமல்,
“வேணாம்…ஞானம் பாட்டி திட்டுவாங்க” என்றேன்.
“அவ கெடக்கா…நான் சொல்லிக்கிருதேன்..வா” என்று வெள்ளைப் பாட்டி சொல்லவும், நடுவீட்டைக் கடந்து வெள்ளைப்பாட்டியோடு அடுப்பறைக்குச் சென்றேன். அடுப்பறைக்குள் நுழைந்ததும், அடுப்பில் கனன்று கொண்டிருந்த கங்கின் நெடி அடி நெஞ்சு வரை சென்று சுருக்கென்று குத்தியது. இதோ, இதை எழுதும் போது கூட, அந்த வாசனை துளி கூட மாற்றமின்றி அப்டியே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் அந்த நெடி வாசனையாக மாறியது தான் ஆச்சரியம்.
“செத்த உக்காரு….உலைய வச்சிட்டு வந்துர்றேன். அந்தாளு பசிக்குதுன்னு வந்துருவாப்ல” என்று எனக்கு சிறிய மரப்பலகையை எடுத்துப் போட்டுவிட்டு,ஊதுகுழலை எடுத்து அடுப்பினருகே சென்று குத்த வைத்து அடுப்பில் கிடந்த கங்கினை ஊதத் தொடங்கினார். பாட்டியிடம் நான்கைந்து இருமல்களை வாங்கிக் கொண்டு அடுப்பு எரியத் தொடங்கியது. உலையை வைத்து விட்டு, நீச்சத் தண்ணி இருந்த சட்டியில் சிறிது கல்லுப்பை அள்ளிப்போட்டு, என்னிடம் நகர்த்தினார்.
“இத்தினி ஊறுகா தரவா” என்றார். உப்புக் கரித்த நீச்சத்தண்ணியை விழுங்கிக் கொண்டே,
“ம்ஹீம்” என்று வேகமாகத் தலையாட்டினேன்.
பாதித் தண்ணியை குடித்து முடித்து ஏப்பம் விட்டவுடன் திரும்ப எருமை ஞாபகத்துக்கு வந்தது. உட்கார்ந்திருந்த பலகையில் இருந்து லேசாக நகர்ந்து எட்டி தெருவைப் பார்த்தேன். எருமை மாட்டின் உடம்பு மட்டும் தெரிந்தது. எப்போதும் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் அதன் வாலில் அசைவில்லை. பாத்திரத்தை கீழே வைத்து விட்டு,
“ஒரு நிமிசம் பாட்டி..இந்தா வந்துர்றேன்” என்று எழுந்து மெதுவாக வாசலை நோக்கி நடந்தேன்.
“யேய்..சாப்டும் போதும் ஊடால எந்திச்சு போகாதய்யா” என்று அவர் சொல்லி முடிக்கும் போது வாசல் நிலைக்கு அருகே நின்றிருந்தேன்.
மாட்டின் கண்கள் மூடியிருந்தது. அதன் பெரிய வயிறு சீராக ஊதவும், சுருங்கவுமாக இருந்தது. கூரைச் சாப்பினுள் கன்றுகள் இன்னும் வந்திருக்கவில்லை. குத்த வைத்து அமர்ந்திருந்த வெள்ளைப் பாட்டி, கைகளை ஊன்றி, அலமாரியில் கைவைத்து எழுந்து, நடுவீட்டின் வாசல் வரை வர, சில நிமிடங்கள் ஆகும். சட்டென்று வேகமெடுத்து ஓடத் தொடங்கினேன். இரண்டு தாவல்களில், ஓட்டுச் சாப்பைக் கடந்திருந்தேன். பலமுறை ஓடித் திரிந்த வீடும் தெருவும், காலுக்குப் பழகியிருந்ததால், வாசலில் கிடந்த கல்லையும் தெருவுக்கு அந்தப் பக்கம் ஓடிய சிறிய சாக்கடைக்கும் ஊடே எத்தனை அடி வைக்க வேண்டும் என்று துல்லியமாக கணிக்க முடிந்தது. மாட்டினுடைய முதுகின் நடுப்பகுதியைத் தான் குறிவைத்து ஓடிக் கொண்டிருந்தேன். சாக்கடையைத் தாண்டி மாட்டை அடைய ஒரு நான்கைந்து அடிகள் இருக்கும் போதுதான், நான் செய்த தவறு புரிந்தது. என்னுடைய அனாலிசிஸில், மாட்டைச் சுற்றி சொத சொதவென்று கிடந்த சாணியையும், சேறையும் கணக்கில் கொள்ள மறந்து விட்டேன். சட்டென கால் வழுக்க நிலை குலைந்தேன். அரவத்தில் மாடு கண் விழித்தது. நான் அதன் கண்ணைப் பார்த்ததை, அதுவும் பார்த்து விட்டது. ஓடி வந்த வேகத்தில் நிற்க முடியாமல் நான் தாவவும், மாடு பெருமூச்சோடு எழவும் சரியாக இருந்தது. மாட்டைத் தாண்ட வேண்டியவன், மாட்டின் மேலே கோணல் மாணலாக மோதி, சைடு வாக்கில், சகதிக்குள் விழுந்தேன். தட்டித் தடுமாறி நான் எழவும், வெள்ளைப்பாட்டி வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சி, முழங்கையில் இருந்த வலி, உடம்பு முழுக்க இருந்த சாணி வாடை என்று அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன்.
“மாடு அத்துக்கிச்சா, முட்டிருச்சாக்கும்” என்று கத்தியவாறு வெள்ளைப்பாட்டி வந்தார். இடது கையைப் பிடித்துக் கொண்டு, என் கன்னத்தில் அப்பியிருந்து சாணியை வழித்துப் போட்டார். அழுகையை அடக்கியதில் தொண்டை வலித்தது. மாட்டைத் திரும்பிப் பார்த்தேன். நின்றவாறு எதையோ மென்றுகொண்டே என்னை சலனமில்லாமல் பார்த்தது.
“கழுவணும் பாட்டி, ஒரு மாதிரி இருக்கு” என்றவனை வீட்டினுள் அழைத்துச் சென்றார். அடுப்பறைக்குப் பின்னால், ஈயப்பாத்திரத்தில் முந்தைய நாள் பிடித்த தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அள்ளி இரைத்து கழுவி விட்டார்.
“உங்க கையி சொரசொரன்னு இருக்கு பாட்டி” என்று எரிச்சல் பட்டேன். வெள்ளைப்பாட்டியின் கைகள் சொரசொரவென்று இருப்பது எனக்குப் பிடித்திருந்தில்லை.
“ரத்தம் வருதான்னு பாரு…சாப்டும் போது எவனாது இப்டி ஊடால எந்திச்சுப் போயி சாணியில விழுந்துட்டு வருவானா. கொடுமய எங்க போயிச் சொல்ல” என்று எத்துப்பல் தெரிய லேசாகச் சிரித்தார்.
“அந்தத் தொட்டில கொஞ்சம் தண்ணி கெடக்கு. இங்கயே குளிச்சிரு. நான் கீழ வீட்டுல போயி துணிய எடுத்துட்டு வாரேன். அவளுக்குத் தெரிஞ்சா வைய்யப் போறா” என்று ஞானம் பாட்டியின் வீட்டுக்கு கிளம்பினார்.
ஏன் இங்க வந்து குளிக்க மாட்டானா என்று ஞானம்பாட்டி திட்டும் வாய்ப்பு உண்டு. ஆனால் எருமைச்சாணிக்கு விழும் திட்டை விட, இதற்குக் கம்மியாகத்தான் விழும் என்பதால், இரண்டு ஆப்சன்களில் இதை டிக் செய்தேன். உண்மையில் நான் விழுந்ததை ஞானம்பாட்டி பார்த்திருந்தால், முதுகு பழுத்திருக்கும் வாய்ப்பு அதிகம் தான்.
வெள்ளைப்பாட்டியும் ஞானம்பாட்டியும் அக்காள் தங்கை. பள்ளிக்கூடத்துக்கு எதிரே இருந்த அந்தத் தெருவில், அடுத்தடுத்த வடக்குப் பார்த்த வீடுகளில் குடியிருந்தார்கள். கிழக்கே இருந்த வீட்டில் ஞானம்பாட்டியும், மேற்கே இருந்த வீட்டில் வெள்ளைப்பாட்டியும் வசித்தார்கள். ஞானம்பாட்டியிடம் எத்தனை அன்பு இருக்கிறதோ அத்தனை கண்டிப்பு இருக்கும். குடும்பம் எப்படியாவது மேடேற வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் வெள்ளைப்பாட்டி, யாரையும் எதற்காகவும் கடிந்து நான் பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை, மாட்டுக்கு வைத்திருந்த தவிட்டை எடுத்துத் தின்றதற்காக, அருள் மாமாவிடம் மாட்டி விட்டதைத் தவிர பெரும்பாலும் என்னை என் போக்கில் தான் விட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இன்றி, என்னை நான் என்பதற்காகவே வாரியணைத்துக் கொண்டிருக்கிறார். வெகு சமீபமாகத்தான், என்னை என் குறைகளோடு ஏற்றுக் கொள்கிறவர்கள் மீது, எனக்கு பற்றுதல் சற்று அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்களைத் தவிர, யார் எனக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எப்பாடு பட்டேனும் அதை மீறவே முயற்சித்திருக்கிறேன்.
தன் தங்கையின் மகள் வழிப் பேரனான என்னை, தன் பேரனாகவே தான் பாவித்தார் வெள்ளைப்பாட்டி. ஞானம்பாட்டிக்கு என் அம்மாவையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். என் அம்மாவோ, சித்தியோ, மாமாமாரோ வெள்ளைப்பாட்டியை பெரியம்மா என்றழைத்து நான் பார்த்ததே இல்லை. அம்மா என்றே அழைத்திருக்கிறார்கள். ஞானம்பாட்டிக்கும் வெள்ளைப்பாட்டிக்கும் வயது வித்தியாசம் சற்று அதிகம். அதனால், ஞானம்பாட்டியையும் கிட்டத்தட்ட அவர் தான் வளர்த்திருக்கிறார். என் பாட்டியை வளர்த்து, என் அம்மாவை வளர்த்து, பின்னர் என்னையும் அவரே தான் வளர்த்தார். எல்லாரையும் தன் பிள்ளையாகத்தான் நினைத்தார்.
எருமை மாடு எபிசோடில் வெள்ளைப்பாட்டி என்னை கடிந்து கொள்ளாதது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரது வீட்டில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். நீச்சத் தண்ணி, பழைய சோறு, மிதுக்கு வத்தல் நாவுக்கு பழகியது. ரோஸ் நிற பாக்கெட்டில் வரும் கோபால் பல்பொடி எனக்குப் பிடிக்கும் என்று தெரிந்து, அதை வாங்கி வைக்கத் தொடங்கினார். எனக்கு கோபால் பல்பொடியைக் கொடுத்துவிட்டு, அவர் மட்டும் சாம்பலில் பல் விளக்கிக் கொள்வார். கோபால் பல்பொடியின் ருசி பிடித்துப் போக, பல் விளக்கும் போதெல்லாம் அதை தின்னவும் தொடங்கினேன். ஒரு நாள் காலையில்,
“எவனாது இப்டி பல்பொடிய திம்பானா” என்று வாய்நிறைய சாம்பலோடு அவர் சிரித்தது, சித்திரமாக அப்டியே மனதில் பதிந்திருக்கிறது.
ஒருமுறை அவரது மடியில் நான் படுத்திருந்த போது, எனது கையை அவரது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார்.
“ஏன் பாட்டி உங்க கையி சொரசொரன்னு இருக்கு” என்றதற்கு,
“வேல செய்றம்ல, காச்சுப் போயிரும்ல” என்றபடி, சொரசொரப்பான கையினால் என கன்னத்தைத் தடவினார். சிறிது சிறிதாக அந்த உள்ளங்கை சொரசொரப்பு எனக்கு பிடித்துப் போனது. பள்ளி, கல்லூரி என்று வளரத் தொடங்கவும் ஊருக்குப் போவது குறையத் தொடங்கியது. எப்போது ஊருக்குப் போனாலும் என் கையில் பணம் திணிக்காமல் அவர் அனுப்பியதே இல்லை. அவருக்கு என்ன வருமானம் இருந்ததென்று எனக்குப் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஞானம் பாட்டி இறந்த போது கூட,
“அவ போயி சேர்ந்து, நான் இருக்கவா..இன்னும் எத்தன கொடுமைய நான் பாக்கணுமோ” என்று அரற்றிக் கொண்டிருந்தவர், நான் கிளம்பும் போது, ஒரு நூறு ரூபாய்த் தாளை என் கையில் திணித்தார்.
“எனக்கு எதுக்கு பாட்டி, நான் வேலைக்கு போறேன் இப்ப. நாந்தான் உங்களுக்குத் தரணும்” என்றதற்கு,
“எனக்கெதுக்குய்யா காசு, நீ எதாது புடிச்சத வாங்கிச் சாப்டு” என்று தன் சொரசொரப்பான கைகளால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வேலை, குடும்பப் பிரச்சனைகள் என்று ஊடே சில வருடங்கள் ஊருக்குச் செல்வது குறைந்து விட்டது. சில வருடங்கள் கழித்து, என் மகளுக்கு சற்றே விவரம் தெரிந்த பிற்பாடு வெள்ளைப் பாட்டியை பார்க்கச் சென்றேன். பள்ளிக்கூடத்துக்கு எதிரே எருமை மாடு கட்டிக் கிடந்த இடத்தில், புதிதாக ஒரு வீடு முளைத்திருந்தது.
“முன்னாடி இங்க எருமை கட்டிக் கெடக்கும் பாப்பா” என்று மகளிடம் சொல்லிக் கொண்டே வெள்ளைப்பாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தேன். ஒற்றைக்காலில் நான் சாய்ந்து நின்ற குத்துக்கல் இத்தனை சிறியதா என்று தோன்றியது. வலதுகையை ஓட்டுச்சாப்பின் மேல் வைத்து குனிந்து உள்ளே சென்றேன், தாவி ஒடித் திரிந்த வாசலையும் குனிந்து தான் கடக்க வேண்டியிருந்தது. அரவம் கேட்டவுடன், வலதுபுறம் இருந்த கட்டிலில் படுத்திருந்த வெள்ளைப்பாட்டி,
“யய்யா” என்று கூட்டிச் சேர்த்து எழுந்தார்.
“நல்லாருக்கீங்களா பாட்டி” என்று அருகே சென்று அமரவும், கையை பிடித்துக் கொண்டார். இம்முறை அவரது உள்ளங்கையை, எனது உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே சொரசொரப்பு இருந்தது. நானும் மனைவியும் அவருக்கு இருபுறம் அமர்ந்திருக்க, வழக்கம் போல குசலம் விசாரிக்கத் தொடங்கினார். என் மகள் சன்னல் அருகே இருந்த மர பெஞ்ச்சில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அந்த மரபெஞ்ச்சில் அமர்ந்து சன்னல் வழியாகப் பார்த்தால் பள்ளிக்கூடம் தெரியும். மதிய நேரங்களில் அதே பெஞ்ச்சில் அமர்ந்துதான், பள்ளியில் சமைக்கும் சத்துணவின் வாசத்தை அடிவயிறு வரை இழுத்துக் கொண்டிருப்பேன்.
“ஒம் மகளா.. நல்ல நெறமா இருக்காய்யா. பாட்டிக்கிட்ட வா”, என்றார். என் மகள் சிரித்துக் கொண்டே கிட்டே செல்லவும், தன் கைகளால் அவளது முகத்தை அள்ளிக்கொண்டார். என் மகளும் அந்த உன்னதமான சொரசொரப்பை உணர்ந்திருப்பாள்.
“ஒங்கப்பன் பாசக்காரன். ஒரு தடவ..இந்த… செயவிலாஸ் பஸ் இருக்குல்ல, அதுல ஏத்தி விட்டுட்டு, எங்க பாட்டியை பத்திரமா எறக்கி விட்டுருங்கன்னு, கண்டக்டர்ட்டயும், டிரைவர்ட்டையும் அத்தனை தடவ சொல்லுதான். பஸ்ஸு கெளம்புற வரைக்கும் அத்தனை தடவை சொல்லுதானாக்கும்” என்று என் மகளிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து தெத்துப் பல் தெரிய சிரித்தார். பின்னர் என்னிடம் திரும்பி,
“நீச்சத்தண்ணி தரவா?” என்று கேட்டார்.
“வேண்டாம் பாட்டி..இருக்கட்டும் உக்காருங்க” என்று சொல்லவும், என் மகளிடம் திரும்பி,
“ஒரே அதத்தான் கேப்பானாக்கும். அவ வைஞ்சாலும் கேக்க மாட்டான்” என்று ஞானம்பாட்டியைச் சொன்னவர், சட்டென்று,
“எனக்கு மின்ன போயிச் சேர்ந்துட்டா. அவ போயி நான் இன்னும் கெடக்கேன்” என்றார்.
“மெட்ராஸுல தான வேலை பாக்க ? செல்லச்சாமிய பாத்தியா” என்று அவரது தம்பியை விசாரித்தார்.
“எங்க அண்ணாச்சி இருந்தா பாத்திருப்பாக, அவரும் இல்ல” என்று மறைந்த அவரது அண்ணனை நினைத்தவர், “இப்டி ஆளுக்கு ஒரு திக்கம் கெடக்கமே” என்று கண்கள் பனித்தார்.
“பிரச்சனையாக்கும் யா ? என்னத்துக்கு ஒங்கிட்ட பேச மாட்டிக்காய்ங்களாம்” என்று மாமாமாரை பேருக்குக் குறை சொன்னார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. சரியாப் போயிரும்” என்றவுடன்,
“நீச்சத்தண்ணி தரவா” என்று மறுபடியும் கேட்டார். வேண்டாம் என்று மறுத்து விட்டு அடுப்பறை நோக்கி நடந்தேன். அதே கங்கின் நெடி அடி நெஞ்சில் சுருக்கென்றது. கோபால் பல்பொடி வைத்திருந்த அலமாரி, அதே இடத்தில் நூலாம்படையோடு அப்படியே இருந்தது.
“மீனா வெளிநாட்டுல இருக்காளாம்ல. வருசத்துக்கு ஒரு தரம் வருவாளா ?” என்று என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
வெள்ளைப்பாட்டிக்குப் பிறகு, இந்த வீட்டிற்கும் எனக்கும் தொடர்பு இருக்காது என்ற உண்மை உரைத்தது. அடுத்தத்த முறை பார்க்கச் செல்லும் போது, அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டேதான் இருந்தது. தொண்ணூறுகளில் வேறென்னெ எதிர்பார்க்க முடியும்.
கோவிட் காலகட்டத்தில் ஒரு நாள், சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டவர், ஒரு வாரத்தில் போய்ச் சேர்ந்திருந்தார். ஊருக்குப் போனேன். வெள்ளைப்பாட்டியை நடுவீட்டில் மர நாற்காலியில் சாத்தி வைத்திருந்தார்கள். அவரது உள்ளங்கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உயிரற்ற அந்த உள்ளங்கையில் எப்போதும் இருக்கும் சொரசொரப்பு இருக்காதோ என்று தோன்றியது. அவர் உயிரோடிருந்த போது, அவரிடம் இருந்து கடைசியாக எனக்குக் கிடைத்த, அந்த உள்ளங்கை சொரசொரப்பை இழக்க மனமில்லாமல், அவரது முன்னங்கையில் “முத்துலட்சுமி” என்கிற தன் பெயரை பச்சை குத்தியிருந்ததை மட்டும் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து விட்டேன்.
மனிதர்களை takers, matchers, givers என்று மூன்று வகைப்படுத்தலாம். Takers எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பவர்கள். Matchers, அடுத்தவருக்கு ஏதாவது செய்தால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்கிற கணக்கோடு செயல்படுபவர்கள். இவர்கள் பெரும்பான்மையினர். Givers வெகு அரிதானவர்கள். எப்போதும் தன்னைவிட அடுத்தவரை முன்னிறுத்துபவர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்மை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் தசாப்தங்கள் தாண்டி சுற்றத்தாரின் நினைவில் நிற்பார்கள் – வெள்ளைப்பாட்டியைப் போல, ஆர்.சிவாஜியைப் போல.
பெருவாழ்வு வாழ்வதற்கு உலகம் முழுக்க பயணப்பட வேண்டும், பெருஞ்சொத்து, பேர், புகழ் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. நிறைந்த மனதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டால் போதும். எனக்குத் தெரிந்த வரையில் வெள்ளைப்பாட்டி அந்த சிற்றூரை விட்டு அதிகமாக வெளியேறியதில்லை. அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்டு, அங்கேயே மறைந்தார். நாங்கள் விருதுநகர் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது, ஒரு வாரம் வந்து எங்களுடன் தங்கியிருந்தார். திரும்ப ஊருக்குச் செல்லும் போது, ஜெயவிலாஸ் பஸ்சில் ஏற்றிவிட்டது அப்போது நடந்தது தான். பிறந்த ஊரிலேயே வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தார். கிட்டத்தட்ட ஒரு மரத்தினைப் போல. மூன்று தலைமுறைகள் அப்பெருமரத்தின் நிழலில் வளர்ந்தன. எல்லா குடும்பங்களிலும் பிறர்க்காக வாழ்ந்த, வாழ்கின்ற இது போன்ற பெருமரங்கள் உண்டு. அம்மரங்கள் அன்றி நம்மைப் போன்றோர் பறவைகளாக முடியாது. பறவைகளான நமக்கு, அம்மரங்களை தொழுவதைத் தவிர வேறென்ன மீட்சி இருந்திவிடப் போகிறது ?
தமிழ்

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை இப்போது எழுதித் தீர்த்து விட்டால், சுற்றியிருக்கும் வெறுமையின் அடர்த்தி சற்று லேசாகக் கூடும்.
செல்வம், பிக்காலி என்றுதான் என்னை எப்போதும் அழைத்திருக்கிறான். என்னை மட்டுமல்ல, சுரேசையும் அப்படித் தான் அழைத்திருக்கிறான். “பிக்காலி” சுரேசிடம் இருந்து செல்வத்துக்கு தொற்றிக் கொண்ட சொல். “மாமா”, “மாப்ள” என்பது போல, பிக்காலி சுரேசுக்கு விருப்பமான ஒரு விளிப்புச் சொல்லாக இருந்தது. தமிழ்ச்சமூகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் பல சொற்களைப் போல வடிவேலுவின் வசனம் ஒன்றிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்.
சுரேசும் நானும் மூன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தோம். ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவன் இருந்த போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே நாங்கள் வீடு மாறிப் போன பிற்பாடுதான் நெருக்கம் அதிகரித்தது. சனி ஞாயிறு மதிய வேளைகளில், சைக்கிளை எடுத்துக் கொண்டு சுரேசின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவன் வீட்டுக்கு எதிரே இருந்த வேப்பமரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டு, வெளேர் என்று அடிக்கும் வெயிலை வேடிக்கை பார்த்தபடி அம்மஞ்சல்லிக்குக் கூட பிரயோசனம் இல்லாத எதையாவது பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். எனக்கு மிகவும் பிடித்த அது போன்ற தருணங்கள், சுரேசுக்கு உவப்பானதாக இருந்ததில்லை.
“மத்தியானம் கறி கிறி தின்னா பேசாம தூங்குடா. மொட்டை வெயில்ல சைக்கிள எடுத்துட்டு வந்துருக்க, பிக்காலிப் பயலே, வீட்டுக்குப் போடா” என்பான்.
இருந்தாலும் உரையாடல் தொடரும். இந்த வழக்கம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். அதே வெளேர் வெயில், அதே வேப்பமரம், அதே சைக்கிள் செட்டப்பில் நின்றிருந்தோம். சுரேஷ் ஹேண்டில்பாரில் கை வைத்து சாய்ந்து நின்று கொண்டிருந்தான். கேரியரில் உட்காந்திருந்த நான், இறங்கி கைலியை அரைக்கட்டாக கட்டிக் கொண்டிருக்கும் போது,
“அண்ணேன் இங்க பாருங்க” என்று, வாய் நிறைய பல்லோடும், கையில் ஒரு பெரிய கரட்டாண்டியோடும் செல்வம் வந்தான். அது கயிற்றில் இருந்த விடுபட முயன்று துள்ளிக் கொண்டிருந்தது. கூடவே அவனது நண்பன் விஜியும்.
“பிக்காலிப் பயலே இத எங்கடா புடிச்ச” என்று சுரேஷ் கேட்க.
“தோட்டத்துல தான், மூக்குப் பொடி வாங்கப் போறோம், வர்றீங்களா” என்றான்.
“லூசுப் பயலே, அத வுடுறா போகட்டும்” என்று சுரேஷ் சொல்லியதை செல்வமும், விஜியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கரட்டாண்டியைத் தொங்கவிட்ட படி, மளிகைக் கடையை நோக்கிச் சென்றார்கள்
போஸ்ட் கம்பத்தை தாண்டும் வரை, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ், என்னிடம் திரும்பி
“பூரா ஒன்னைய மாதிரித் தாண்டா இருக்காய்ங்க. மொட்டை வெயில்ல ஓணான் புடிக்கிறாய்ங்களாம். மத்தியானம் கறி கிறி தின்னா தூங்குங்கடா,பிக்காலிப் பயலுகளா” என்றான்.
இது நடந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை செல்வம் தொடர்பான நினைவில் என் மனதில் பசுமையாக பதிந்திருப்பது, அரை டவுசரோடும், கரிச்சாமண்டையோடும், சிரித்தபடி கரட்டாண்டியோடு அவன் வந்து நின்ற காட்சி தான்.
செல்வம், சுரேசுக்கு பக்கத்து வீடு. எங்களை விட நான்கைந்து வயது இளையவன். சுரேசைப் பார்க்க அவன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், செல்வத்தைப் பார்ப்பேன். ஆரம்ப காலங்களில் அதிகம் பேசிக் கொண்டதில்லை. பன்னிரெண்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏழாங் கிளாஸ் பயல்களிடம் பேச பெரிதாக ஒன்றும் இருந்திருக்கவில்லை. சில மாதங்களில், சுரேஷ் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், செல்வமும் வரத் தொடங்கினான். அதன் பிறகு கிரிக்கெட், டீக்கடை, கிணற்றடி, கோயில் திருவிழா என்று தெருப்புழுதியாய் சுற்றியதில் என்று வெகு நெருக்கமாகிவிட்டோம்.
பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்காக மதுரை சென்ற பிற்பாடும் வாரத்திற்கு ஒரு முறை சந்திக்கும் வழக்கம் தொடரத் தான் செய்தது. வேலைக்காக சென்னை, பின்னர் பெங்களூரு என்று வாழ்க்கை அடுத்தடுத்த கியர்களை மாற்றும் போதுதான் சற்று இடைவெளி விழுந்தது. தீபாவளி, பொங்கல் இன்னபிற விடுமுறை நாட்களின் போது மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிந்தது.
2010 வாக்கில் நான் பெங்களூரில் இருக்க, சுரேஷ் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நான் சென்னை செல்லும் போது, சுரேஷ் வீட்டில் தங்குவது வழக்கம். வேளச்சேரி கங்கை நகரில் இருந்த அந்த வீட்டில், சுரேசுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு முறை கங்கை நகரில் இருந்த அந்த வீட்டிற்குச் செல்லும் போது தான் பல ஆண்டுகள் கழித்து செல்வத்தை மீண்டும் பார்த்தேன். நன்றாக முடி வளர்த்து, தாடி, பெரிய மீசை என்று ஆளே வேறு மாறியிருந்தான்.
“ஹே..பிக்காலி…எப்டி இருக்கீங்க” என்று கட்டிக்கொண்டான்.
“என்னடா காட்டெருமை மாதிரி ஆயிட்ட” என்றவுடன்.
“வஞ்சனை இல்லாத மனசு இருந்தா அப்டிதான் பிக்காலி இருக்கும்” என்றான்.
எம்.சி.ஏ முடித்துவிட்டு சுரேசுடன் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தான். இடைப்பட்ட காலத்தில் டூட்டியில் இருக்கும் போதே அவனது அப்பா தவறியிருந்தார். அது ஒரு மாதிரி அவனை சீரியஸாக்கியிருந்தது. இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அவ்வப்போது மீறிக்கொண்டுதான் இருந்தது.
“அப்பா வேலையக் குடுத்தாங்கண்ணே. நாந்தான் எம்.சி.ஏ முடிச்சிட்டன்ல. அதான் அக்காவ எடுத்துக்கச் சொல்லிட்டேன். அது போலீஸாயிருச்சுன்னா கொஞ்சம் தெம்பா இருக்கும்ல. பெருசு பரவால்ல, சிறுசுக்கு தைரியம் பத்தாதுண்ணே. நான் வேலைக்குப் போற வரைக்கும் அம்மாவை அது பாத்துக்கிட்டா, அதுக்கப்புறம் நான் பாத்திக்கிருவேண்ணேன்” என்றான்.
இதைச் சொல்லும் போது அவனுக்கு 23-24 வயது இருக்கும்.
அப்பாக்களுக்கும், இளவட்ட மகன்களுக்கும் இடையே, எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், எவ்வளவு வாக்குவாதங்களைக் கடந்தாலும், தங்கள் இருபதுகளில் அப்பாக்கள் தவறும் பொழுது, மகன்கள் உண்மையில் தவங்கித்தான் விடுகிறார்கள். ஆனால், அதிலிருந்து வெகு வேகமாக விடுபட்டு, அசுரத்தனமாக உழைத்து முன்னேறி, குடும்பத்தை மேடேற்றுவதும் அவர்கள் தான். சகோதரிகளோடு இருப்பவர்கள் அண்ணனாக, தம்பியாக மட்டுமல்ல, தகப்பனாகவும் மாறுவதை நேரில் உணர்ந்திருக்கிறேன். ஓரிரு நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு பெங்களூர் சென்று விட்டேன்.
சில மாதங்கள் கழித்து, சுரேஷுக்கும் கல்யாணம் நிச்சயமானது. கல்யாண தேதி குறித்து தகவல் சொல்ல போன் செய்தவன்,
“வேளச்சேரி வீட்டை அடுத்த மாசம் காலி பண்றோம்டா. செல்வத்தை தான் என்ன செய்றதுண்ணு தெரியல. எங்கயாது தங்க இடம் கிடைச்சிட்டா போதும், பாத்துக்கிரலாம்” என்றான்.
“ம்ம்” கொட்டிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன்.
உண்மையில் எனக்கும் பெங்களூரு செட் ஆகவில்லை. இடமாறுதல் தேவைப்பட்டது. அந்த உரையாடல் நடந்து இரண்டு வாரங்களில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. சுரேசுக்கு போன் செய்தேன்.
“சென்னை மாறி வர்றண்டா. இனிமே அங்கதான். வீட்டைக் காலி பண்ண வேண்டாம், செல்வம் என்கூட இருக்கட்டும். பிரபாவும் என் கூட வருவான்” என்றவுடன் ஜாலியாகிவிட்டான். பிரபா எங்களுக்கு ஸ்கூல் ஜீனியர். பெங்களூரில் என்னோடு தங்கி படித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகான இரண்டு வருடங்கள் செல்வம், பிரபா, கணபதி நான் என்று கங்கை நகரில் அட்டகாசமாகக் கழிந்தன.
செல்வத்துக்கு மட்டும் வேலை அமையவில்லை. அவனுக்கு வேலை தேட இசவாக இருக்கும் என்று, ஊரில் இருந்த பைக்கை சென்னைக்குக் கொண்டு வந்தேன். பைக் வந்த ஒரு மாதத்தில், செல்வத்துக்கு பிஎஸ்என்எல் சப்போர்ட்டில் காண்டிராக்ட் வேலை கிடைத்தது. மதியம் ரெண்டு மணி ஷிஃப்ட். நந்தனத்தில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டு, இரவு பத்து மணி வாக்கில் வருவான். அதன் பிறகு இருவரும் சென்று விஜயநகர் சுதர்லேண்ட் அருகே டீக்குடித்துவிட்டு, அரட்டை அடித்துவிட்டு வருவோம்.
“பதினோரு மணி ஆச்சு. வீட்டுக்குப் போயி தூங்குங்கடா. ரோடல்யே நிக்கிறானுக. பிக்காலிப்பயலுக” என்று சுரேஷ் திட்டுவான்.
செல்வத்துக்கு ஒரு காதல் இருந்தது. கல்லூரியில் உடன் படித்த ஒரு தெலுங்கு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான்.
“சொல்ட்டியாடா” என்றேன்.
“இல்லண்ணே, நான் லவ் பண்றேன்னு சொல்லி அதுபாட்டுக்கு ஓகே சொல்லிருச்சுன்னா, டபுள் சைட் ஆயிரும். அப்புறம் நேரத்துக்குப் பேசணும், பாக்கணும். சரிப்பட்டு வராதுண்ணே. இதுண்ணா ஒன்-சைட் பாருங்க. என் இஷ்டம், நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணுவேன்ல” என்றான்.
“என்னடா வித்தியாசமா லவ் பண்றீங்க” என்றதற்கு,
“அந்தப் பிள்ளைக்கும் என்னை புடிக்கும்ணே. இப்ப நான் கேட்டா ஓகே சொல்லிரும். வேலை இல்ல எனக்கு இன்னும், அது வீட்ல தெரிய வந்துச்சுன்னா, வேற மாதிரி பஞ்சாயத்து ஆயிரும். கொஞ்சம் பொறுப்போம்னு பாத்தேன். என்ன ஆயிரப் போகுது” என்றான்.
இடையிடையே அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசுவான். ஹாலில் ஒரு ஒரமாகப் படுத்து மெசேஜைப் படித்து சிரித்துக் கொண்டு இருப்பான்.
இதற்கிடையே, எப்போதோ எழுதியிருந்த ஒரு மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தான். நேர்காணலுக்கு டெல்லி வரச் சொல்லியிருந்தார்கள். உயர்பதவி, நல்ல சம்பளம். செல்வத்தைத் தனியாக அனுப்பவும் யோசனை. பின்னர் வழக்கம் போல, அண்ணன் ஒருவர் மூலமாக நண்பன், நண்பனின் நண்பன், நண்பனின் நண்பனுக்கு நண்பன் என்று ஒருவரைப் பிடித்தேன். அவரிடம் பேசி தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். செல்வம் அங்கேயே சென்று தங்கி, நேர்காணலையும் முடித்து விட்டு வந்துவிட்டான்.
“பண்ணிருக்கேன் பிக்காலி. பாப்போம்” என்று சுரத்தில்லாமல் சொன்னான். சிரமம்தான் போல என்று அதனை மறந்து விட்டோம்.
டெல்லி சென்று வந்த பின்பும் அதே பிஎஸ்என்எல் வேலையில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான். பல மாதங்கள் கழித்து, ஒரு மட்ட மத்தியானத்தில், வேளச்சேரி முருகன் கல்யாண மண்டபத்துக்கு அருகே இருந்த டீக்கடை வாசலில், ஊரில் உள்ள மொத்த வெயிலையும் நாங்கள் எங்கள் தலையில் வாங்கிக் கொண்டிருந்த போது, அந்த நற்செய்தி வந்தது.
செல்வம் அந்தப் பணிக்குத் தேர்வாகியிருந்தான். கடையில் டீ சொல்லும் போது பி.எஸ்.என்.எல் காண்டிராக்ட் எம்ப்ளாயியாக இருந்தவன், டீ-க்ளாஸை வைக்கும் போது மத்திய அரசுப் பணியில் குரூப்-ஏ ஆபீசர் ஆகியிருந்தான். அந்த நொடியில் செல்வத்தின் வாழ்க்கை மேடேறத் தொடங்கியது. கைகளை இறுக்கிக் கொண்டு, கண்கள் பனிக்க, சிரித்துக் கொண்டே, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான். வெகு நிதானமாக இருந்தான். நானெல்லாம் எனக்கு வேலை கிடைத்த போது சன்ன சலம்பலில் இருந்தேன். அவன் கடந்து வந்த சோதனைகள் அவனை அத்தனை பக்குவப்படுத்தி இருந்தன.
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது. டெல்லியில் சேரச் சொல்லி உத்தரவு. ஆனால் போஸ்டிங் அந்தமான் தீவுகளில். ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டோம். அவனுக்கு முழுதாக விருப்பமில்லை, ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை எப்படி நிராகரிக்க முடியும்.
“இல்ல பிக்காலி, அஞ்சு வருசம் இருந்தா டிரான்ஸ்பர் வாங்கிக்கலாமாம். மெட்ராஸே வாங்கிட்டு வந்துருவென். டோண்ட் ஒர்ரி” என்றான்.
அந்தமானில் போர்ட் ப்ளேர் என்றால் கூட பரவாயில்லை. அங்கிருந்து ஆறு மணி நேரப் பயணதில், மாயா பந்தர் என்றொரு இடத்தில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். அலுவலகத்தில் மட்டும் சிக்னல் கிடைக்கும். அங்கிருந்து தான் போன் பேசுவான். வருடத்திற்கு ஒரு முறை பொங்கலை ஒட்டி வருவான். சென்னைக்கு வந்து, இங்கிருந்து கயத்தாறு அருகே இருந்த சொந்த ஊருக்கு சாமி கும்பிடச் செல்வான். அவனது அப்பாவை அங்கே தான் அடக்கம் செய்திருந்தார்கள்.
இதற்கிடையே எனக்கு திருமணம் நிச்சயமானதை அவனுக்கு தகவல் சொன்னேன்.
“ரெண்டு மூணு நாளு முன்ன வர முடியுமான்னு தெர்ல பிக்காலி. ஆனா கல்யாணத்தன்னைக்கு வந்திருவேன். டோண்ட் ஒர்ரி” என்றான்.
எனது திருமணத்திற்கு ஒரிரு வாரங்கள் முன்பு ““A real short bluff” என்ற தலைப்பிட்டு, ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தான். அவன் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது குறித்து வெகுவாக வருத்தப்பட்டிருந்தான். நண்பர்கள் உடன் இல்லாத ஏதோ ஒரு தீவில் தனிமை வேறு அவனை சிரமப்படுத்தியிருக்கிறது. அவன் அப்பா தவறியது, அவன் கஷ்டபட்டதை எல்லாம் சொல்லி “என்கிட்ட வேலை இல்லாதப்ப, பாக்கெட் காலியா இருந்தப்ப நீங்க, அந்தப் பொண்ணு எல்லாரும் என் கூட இருந்தீங்க. இப்ப வேலை இருக்கு, பாக்கெட் நிறைய காசு இருக்கு. ஆனா நீங்க யாரும் என் கூட இல்ல. அந்தப் பொண்ணும் என் கூட இல்ல. I feel bad and unlucky. ஆனா இந்தத் தனிமை கூட எனக்கு பிடிச்சிருக்கு, ஏன்னா நான் அழுதா யாருக்கும் தெரியாதுல்ல” என்ற ரீதியில் எழுதி அனுப்பியிருந்தான். படித்துவிட்டு நான் பதில் எதுவும் எழுதவில்லை.
அதன் பிறகு எனது திருமணத்திற்கு வந்தான். அவனது அக்கா திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். எனக்கு மகள் பிறந்த போது தகவல் சொன்னேன். சொன்ன நாளில் இருந்து என் மகளின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான்.
“அத வச்சு என்னடா செய்யப்போற” என்றதற்கு,
“ஹலோ..அனுப்புன்னா அனுப்பணும். நான் பெரியவனா, நீங்க பெரியவனா. சொல் பேச்சுக் கேட்டுப் பழகுங்க” என்றான்.
ஓரிரு மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவனிடம் இருந்து ஈமெயில் வந்தது. எனது மகளின் பிறப்புச் சான்றிதழில், பச்சை மையில் கையெழுத்திட்டு, அவனது பதவிக்கான சீல் வைத்து, அதனை ஸ்கேன் செய்து “Thanks for all you have done for me” என்று எழுதி அனுப்பியிருந்தான்.
அவன் க்ரூப்-ஏ ஆபீசர் ஆகி, அட்டெஸ்டேஷன் செய்து கையெழுத்திட்ட முதல் சான்றிதழ் என் மகளுடையது. என் மகளுக்கான முதல் சான்றிதழில் முதல் அட்டெஷ்டேஷன் செல்வத்தினுடையது. இப்படி யோசித்து செய்வான் என்று நான் நினைக்கவில்லை. அந்த ஒற்றைக் கையெழுத்தின் பின்னால் இருக்கும் உழைப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் விட என்ன பெரிய பரிசினை அவனோ நானோ என் மகளுக்குக் கொடுத்துவிட முடியும்.
“சந்தோசம்டா” என்பதைத் தவிர அவனிடம் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு.
அது தவிர, எப்போதும் போல பொங்கலை ஒட்டி வரும் போது மட்டும் நேரில் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை வீட்டுக்கு வரும் போது மரத்தால் செய்த ஒரு அழகான கிருஷ்ணர் சிலை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான்.
“இத வச்சு நான் என்னடா செய்ய” என்றதற்கு,
“குடுத்தா வாங்கி வச்சிக்கணும். கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது, புரியுதா, மண்ட பத்ரம்” என்றான்.
“எப்படா இங்கிட்டு வரப் போற. போயி ஆறு வருசம் ஆகப் போவுது. அஞ்சு வருசத்துல டிரான்ஸ்பர் வாங்கிரலாம்ன”
“வந்துரும் பிக்காலி. கேட்டுருக்கேன்”
“நீ இருக்க ஊருக்கு எவனும் பொண்ணு குடுக்க மாட்டாண்டா. இங்கிட்டு வந்தாத்தான் ஆச்சு” என்றதற்கு
“எனக்கு எவன் பொண்ணு தரமாட்டேங்கிறவன்” என்றான்.
அன்றைக்கு ஏர்போர்ட் சென்று விட்டு “You will not find your brown color leather shoes in your shoe stand. Don’t search for those. They have come with me. Thank you” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான். அனைத்திலிருந்தும் வெளிவந்து நார்மல் ஆகிவிட்டான் என்று நினைத்தேன்.
மேற்சொன்ன உரையாடல் நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து, ஒரு நாள் மதியம் அலுவலக மீட்டிங்கில் இருந்த போது, சுரேஷ் ஃபோன் செய்தான். அவன் அப்போது வேலை விசயமாக துபாய் சென்றிருந்தான். மீட்டிங்கில் நான் பேசிக்கொண்டு இருந்ததால், அவன் இரண்டு முறை போன் செய்த போதும் எடுக்கவில்லை. மனதில் எதோ பிசிறு தட்ட, போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, சுரேஷுக்கு டயல் செய்தேன்.
நான்கைந்து ரிங் கழித்து சுரேஷ் போனை எடுத்தான். சர்வ நிச்சயமாக கெட்ட செய்தி எதோ சொல்லப் போகிறான் என்று தெரிந்தது.
“ஹலோ” என்றான்.
“சொல்றா..போன் பண்ணிருந்த…மீட்…” என்று முடிப்பதற்குள்.
“செல்வம் செத்துட்டாண்டா” என்றான்.
எதுவும் பேச முடியாமல், தலையில் கைவைத்து, அலுவலகத்தின் கண்ணாடி சுவர் வழியாக ரோட்டை வெறித்துக் கொண்டிருந்தேன். மொட்டை வெயில் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது.
செல்வம், எப்போதும் போல பொங்கலுக்கு ஊருக்கு வரக் கிளம்பியிருக்கிறான். அவன் இருக்கும் இடத்தில் இருந்து போர்ட் ப்ளேருக்கு ஜீப்பில் வந்து, பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வருவான். அன்றைக்கும் அதே போல அவனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். இடையே ஒரு காட்டுப்பகுதியில் இருந்த செக் போஸ்டில் கையெழுத்திட்டவன், அங்கேயே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறான். மாரடைப்பு. அருகில் அவசர சிகிச்சைக்குக் கூட மருத்துவமனை கிடையாது.
வேறு சில தொடர்புகளின் மூலம் அவனது அலுவலகத்தின் சென்னைக் கிளையில் இருந்த ஒரு உயர் அலுவலரை தொடர்பு கொண்டோம். நிறைய உதவி செய்தார்கள். போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவனது உடலை விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார்கள்.
“போர்ட் ப்ளேரில் இருந்து சென்னைக்கு ஃப்ளைட்ல அனுப்பி, அங்க இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி, வீட்டுல கொண்டு போயி இறக்கிருவோம். ஆனா ஃபார்மாலிட்டீஸ் லேட் ஆகும். நீங்க நேரா final ritesக்கு வீட்டுக்கு போயிருங்க” என்றார் அங்கே இருந்த அதிகாரி.
சுரேஷ் அன்றே துபாயில் இருந்து வந்து சேர்ந்தான். அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, மதுரை சென்றோம். பிரபாவும், விஜியும் மதுரையில் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். செல்வம் இல்லை என்று நம்பவே முடியவில்லை. யாருக்கும் அழுகை கூட வரவில்லை. கயத்தாறு போகிற வழியில் நிறுத்தி நிதானமாக டீ எல்லாம் கூட குடித்தோம். வெகு சாதாரணமான பயணம் போல் இருந்தது. செல்வத்தின் உடல் வருவதற்கு சற்று முன்னரே அவனது ஊருக்குச் சென்று விட்டோம். கயத்தாறு தாண்டி, கிழக்கே செல்ல வேண்டும். மிகவும் பின்தங்கிய, சிறிய ஊர். இங்கிருந்து தொடங்கிய ஒருவன், தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று, டெல்லி வரை சென்று நேர்காணலில் தேர்வாகி, மத்திய அரசில் ஒரு நல்ல பதவியை அடைந்தான் என்று நினைக்கவே சிலிர்த்தது.
ஊர் முக்கில் இருந்த புளியமரத்தின் அருகே மொத்த ஊரும் காத்திருந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்த உடலை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல, சில ஊர்களின் கட்டுப்பாடுகள் அனுமதிப்பதில்லை. ஊருக்குள் இறக்கி வைத்து, அப்படியே இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். செல்வத்தின் அம்மாவும், அக்காமாரும் அழுது ஒய்ந்திருந்தார்கள்.
சற்று நேரத்தில் ஒரு வெள்ளை நிற வேன் ஊருக்குள் வந்தது. அது ரிவர்ஸ் எடுத்து நிற்கவும், அழுகைச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. செல்வத்தின் பெயர் எழுதிய, வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஒரு சவப்பெட்டியை வேனுக்குள் இருந்து இறக்கினார்கள். காத்திருந்தோர் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்கள். வேனில் உடன் வந்த ஒருவர், பெட்டியைத் திறந்தார், செல்வம் தூங்குவது போல சலனமில்லாமல் படுத்திருந்தான். அழுகை ஓலமாக மாறியது. செல்வம் படுத்திருப்பதையும், சுற்றியிருப்போரின் ஓலத்தையும் தாங்க முடியாமல் விலகி நின்று விட்டேன். விஜியும், சுரேசும் அவனைப் பார்த்தபடியே நின்று அழுதுகொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில், பெட்டியை மூடி இடுகாடு நோக்கி கொண்டு செல்ல, கூடவே சென்றோம். அவனது அப்பா அடக்கம் செய்யப்படிருந்த இடத்துக்கு அருகே, கல்லறைக்கு இடம் தயார் செய்திருந்தார்கள். செல்வம் இருந்த பெட்டியை கயிற்றில் கட்டி இறக்கினோம். மண்ணை மூடி நிரப்பும் போது, அங்கிருந்து விலகி, இடுகாட்டின் அருகே இருந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றிருந்தேன். சுரேஷ் மரத்தில் கையை வைத்து, சாய்ந்தபடி நின்றிருந்தான். விஜி கைகளைக் கட்டியபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் எங்களுடன் இருக்கும் வெயில் அன்றும் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது. நான், சுரேஷ், விஜி, வேப்பரம், வெயில் என்று, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் செல்வத்தை முதன்முதலில் பார்த்த போது இருந்த அனைத்தும் அன்றும் இருந்தன, செல்வத்தைத் தவிர.
என்னைவிட சுரேசுக்கு தான் செல்வம் நெருக்கம். சுரேஷ் அவனை சொந்த தம்பியாகத்தான் பாவித்தான். இன்னமுமே அவன் இல்லாமையை சுரேஷ் எப்படி தாங்கிக் கொள்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. செல்வம் இறந்த பிற்பாடு, மாயா பந்தரில் அவன் இருந்த வீட்டுக்கு சென்று பொருட்களை எடுத்து வருவோம் என்று சுரேஷ் அழைத்த போது நான் செல்ல மறுத்து விட்டேன். எனக்கு அவன் இருந்த வீட்டையோ, அந்த இடத்தையோ பார்க்கும் தெம்பு இல்லை.
“நீயும் போகாத. கஷ்டமா இருக்கும். அவனே இல்லன்னு ஆயிருச்சு. பொருளைக் கொண்டு வந்து என்ன செய்யப் போற. பேசாம இரு” என்றேன்.
சில மாதங்கள் கழித்து, ஒரு மத்தியானத்தில் சுரேஷை பார்க்க வேளச்சேரி வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த ஒரு வேப்பமரத்தின் நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். புல்லட்டில் நான் உட்கார்ந்திருக்க, சுரேஷ், ஹேண்டில் பாரில் கையை வைத்து சாய்ந்து நின்றிருந்தான்.
“அந்த வண்டியைப் பாத்தியா” என்று கைகாட்டினான்.
எதிரே ஒரு கருப்பு நிற பொலீரோ ஜீப் நின்று கொண்டிருந்தது. சுரேஷ் அந்தமான் சென்று பொருட்களை மட்டுமல்லாது. செல்வத்தின் ஜீப்பையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறான்.
“டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தா, உன் வீட்டு வாசல்ல இதக் கொண்டு வந்து நிறுத்தணும்னு சொன்னான். ஊருக்கு அனுப்பப் போறேன். சாவி எடுத்துட்டு வரவா. பாக்குறியா ?” என்றான்.
எப்போதோ ஒரு உரையாடலில் எனக்கு பொலீரோ மிகவும் பிடிக்கும் என்று சிலாகித்துச் சொன்னதை அத்தனை நாட்கள் நினைவில் வைத்திருந்திருக்கிறான்.
“வேணாம்டா” என்று மறுத்து விட்டேன். தூசி படிந்து நின்ற அந்த கருப்பு நிற பொலீரோ இன்னும் வெகு காலத்திற்கு என் நினைவில் நிற்கும்.
பல நேரங்களில் செல்வம் இன்னும் எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக மனதுக்கு தோன்றினாலும், அவன் இல்லை என்ற நிதர்சனத்தின் கனம் அவ்வப்போது உறுத்தும். பெருஞ்சோகங்களின் கனத்தை லேசாக்கும் ஆற்றல் எழுத்துக்கு உண்டு. வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து, இதோ எழுத்தின் மூலம் அந்தக் கனத்தை சற்று இறக்கி லேசாக்கிக் கொண்டேன். எழுத்தாகி விட்ட எங்கள் செல்வம் இனி தொடர்ந்து வாழ்வான்.
பிக்காலி.
தமிழ்

@simtaankaaran புரியாத மொழியில் பேசாமல், சாமிக்கும் சனத்துக்கும் ஊடே மூன்றாம் நபர் யாரும் இல்லாமல், “ஏன் இப்டி உன் புள்ளைய சங்கடப்படுத்துற ? உன் புள்ளைக்கு நல்ல வழி காட்டிக் குடுக்கணும். செய்வியா மாட்டியா ? ” என்று உரிமையோடு தெய்வத்தை நடுவீதியில் நிறுத்துவது.
நினைவில் நின்ற வரிகள்
தமிழ்

ஊர்ச்சாமிகள்
எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு.
எப்போது ஊர் நினைவு வந்தாலும், வடக்கே பார்த்து அமர்ந்துள்ள காளியம்மனும், அவளது மஞ்சள் அப்பிய உக்கிரமான முகமும் கண்முன் வருவது ஏன்? எங்கு கொட்டுச் சத்தம் கேட்டாலும், உடனே “டண்டண்டகுமா…க்கும் டகுமா…டண்டண்டகுமா” என்று ஊரில் கேட்ட உருமி மேளத்தின் சத்தம் மண்டைக்குள் உருள்வது ஏன் ? திரைப்படத்தில் யாராவது சாமியாடுவதைப் பார்த்தால் கூட ஒரு கையில் வேல்கம்பும், மறு கையில் தீப்பந்தமும் ஏந்தி, சல்லடத்தோடு ஆடும் வைரசாமி ஏன் நினைவுக்கு வருகிறார் ?
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெறுமனே பராக்கு பார்த்துக் கொண்டே காத்திருந்த ஒரு மே மாத நாளில், யூட்யூப் அல்காரிதம் “எங்க ஊரு மாரியம்மா” பாடலைக் கொண்டு வந்து சேர்த்தது. பாடலின் தொடக்கத்தில் வரும் prelude முடியும் வரை ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. “எங்க ஊரு மாரியம்மா….தங்கமான காளியம்மா” என்று தொடங்கி, “நாங்க ரொம்ப ஏழையம்மா..நட்டு வச்ச வாழையம்மா...தண்ணி விட்டு வளர்த்து விடு தாயே முத்துமாரியம்மா” என்று மலேசியா வாசுதேவன் உருக, மனம் ஒரு நிமிடம் திண்டாடிவிட்டது. கங்கை அமரனும் மலேசியா வாசுதேவனும் சேர்ந்து டெலிபோர்ட்டிங் சக்தி உள்ள ஒரு பாடலை இயற்றுவார்கள் என்று யார் கண்டது. இருக்கும் இடத்தில் இருந்து, நொடி நேரத்தில் நம்மை சொந்த ஊருக்குக் கடத்திச் செல்லும் வல்லமை பெற்ற இது போன்ற நிகழ்வுகள் நம் எல்லோருடைய நினைவிலும் பதிந்திருக்கின்றன தானே ?
புரியாத மொழியில் பேசாமல், சாமிக்கும் சனத்துக்கும் ஊடே மூன்றாம் நபர் யாரும் இல்லாமல், “ஏன் இப்டி உன் புள்ளைய சங்கடப்படுத்துற ? உன் புள்ளைக்கு நல்ல வழி காட்டிக் குடுக்கணும். செய்வியா மாட்டியா ? ” என்று உரிமையோடு தெய்வத்தை நடுவீதியில் நிறுத்தி, கட்டளையிடுவதைத் தாண்டி என்ன பெரிய பக்தி இந்த உலகத்தில் இருந்துவிடப் போகிறது. என்ன பிரச்சனை வந்தாலும், “காளியாத்தா பாத்துக்கிருவா” என்று சொல்லும் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பின்னால் இருப்பது அந்த உணர்வு தான் எனத் தோன்றும்.
கோடைகாலக் கோயில் திருவிழாக்கள், காக்கும் தெய்வங்களின் திருவிழாக்கள். எளிய மக்களின் திருவிழாக்கள். எளியவர்களைக் காக்கும் தெய்வங்களும் எளியவர்களாய் இருத்தல் தான் எத்தனை அழகு. வைகாசி மாத பெளர்ணமியன்று எங்கள் ஊர்ப் பொங்கல். ஓடையில் மண் எடுத்து வந்து, செவ்வாய் இரவு சாமி செய்வதில் தொடங்கி, பொங்கல் வைத்தல், கிடா வெட்டு, முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி என்று மறுநாள் சாயங்காலம் சாமி கரகத்தைக் கரைக்கும் வரை உணர்வுக்குவியல்களால் ஆன நிகழ்வுகள். உருமிகள் முழங்க சாமியை வருத்தி அழைக்கும் போது பொடனி மயிர்கள் சிலிர்த்தெழுந்து நிற்கும். இத்தனை வருடங்களாக அதே இடம், அதே உருமி, அதே சாமி தான். ஆனால் அந்த நிகழ்வு ஒரு முறை கூட சிலிர்ப்புக்குள்ளாக்காமல் இருந்ததில்லை. ஒரு மாதிரியான trance அது. சாமி நகைகள் அடங்கிய செல்லப்பெட்டியை தூக்கிக் கொண்டு, சாமி செய்யும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
கிணற்றடியில் கூட்டமாக உட்கார்ந்து சாமி செய்வார்கள். வெண்கலக் குடத்தின் கழுத்தில் மஞ்சனத்தால் சாமி முகத்தை வடிவமைத்து, குடத்தினுள் வேப்பங்கிளைகளைச் சொருகி, அதில் பூச்சுற்றி, சூலாயுதம் போல் செய்து, சப்பரத்தில் ஏற்றுவார்கள். நச்சாடலிங்கம் தாத்தா தான் பல ஆண்டுகளாக சாமி செய்து வருகிறார். பத்து மணிக்குத் தொடங்கினால், சாமி கரகம் சப்பரத்தில் ஏற விடிகாலை மூன்று நான்கு மணி ஆகிவிடும். சிறு வயதில், நான் ரசித்த மிகச் சிறந்த இரவுகளாக, சாமி கரகம் செய்யும் அந்த இரவுகள் மட்டுமே இருந்திருக்கிறது. பந்தலில் குத்த வைத்து, தலையை ஒரு பக்கம் சாய்த்து, வாயைப் பிளந்த மானைக்கு மணிக்கணக்கில் அமர்ந்தது கரகம் செய்வதைப் பார்த்தது உண்டு.
விடிகாலையில் சப்பரத்தில் ஏற்றி கரகத்தை கோயிலுக்குள் சேர்தது விடுவார்கள். பொங்கல் வைத்து, கிடா வெட்டு முடிந்து அன்று மாலை கரைப்பதற்குத்தான் சாமி கரகத்தை வெளியே கொண்டு வருவார்கள். மாலையில், கரகத்தை மீண்டும் சப்பரத்தில் ஏற்றி கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு, அதன் பின்னர் முளைப்பாரியோடு கரைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வார்கள். கோயிலுக்குள் இருந்து சாமி கரகத்தை இறக்கி சப்பரத்தில் மீண்டும் ஏற்றும் போது குறுக்கே யாரும் மறிக்கக் கூடாது. அத்தனை பெரிய கரகத்தை நான்கைந்து பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். அந்தக் கோயிலின் சிறிய வாசல் வழியாக ஒரே வேகத்தில் கொண்டு வந்து சப்பரத்தில் ஏற்றினால் தான் உண்டு.
ஒரு முறை திருவிழா முடியும் நேரத்தில், சப்பரத்தை கோயில் வாசலில் தயாராக வைத்து விட்டு, கரகத்தை கோயிலுக்குள் இருந்து தூக்கி வரச் சென்றார்கள். உருமிகள் முழங்க, குலவையோடு கூட்டம் ஆர்ப்பரிக்க, கரகம் இறங்கிய பொழுது, கரகத்தைத் தூக்கி வந்த ஒருவருக்கு, அருள் வந்து முறுக்கிக் கொண்டார். மெலிந்த இளைஞன் தான். ஆனால் இரண்டு மூன்று பேர் பிடித்தும் திமிறிக் கொண்டிருந்தார். நான்கைந்து பேர் சேர்ந்துதான் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மற்றவர்கள் ஒரு வழியாக சமாளித்து கரகத்தை கோயிலில் இருந்து வெளியே கொண்டு வர முயலும் போது, அந்த இளைஞனை வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டம் பாதையை மறிக்க, கரகத்தை தூக்கியவர்கள், நாக்கைத் துருத்தி தரை அதிர மிதித்து ஆங்காரமாகக் கத்தினார்கள். கூட்டம் விலகி வழிவிட முயன்று கொண்டிருந்த போது, திடீரென்று பந்தக்காலில் தீப்பற்றி, திகு திகு வென மேலே வரை ஏறியது. ஒரு பக்கம் பந்தல் எரிந்து கொண்டிருக்க – அந்த கூச்சல், குழப்பத்தினூடே, ஹோவென்ற சத்தத்தோடு, படியிறங்கி கரகத்தை சப்பரத்தில் சேர்த்தார்கள். உருமிகள் நிற்கவில்லை, கொட்டுக்காரர்கள் முன்னைவிட வேகத்தோடு இருந்தார்கள். கூட்டத்தின் ஒரு பகுதி தீயை அணைப்பதில் மும்முரமாக, சப்பரம் கோயிலைச் சுற்றத் தொடங்கியது. அத்தனை சலசலப்பிலும், கூட்டத்திலும், நச்சாடலிங்கம் தாத்தா, கோயில் வாசலில் எரிந்து கொண்டிருக்கும் பந்தலின் முன்னால் நின்று, வானத்தைப் பார்த்து, கண்களில் நீர் கோர்க்க, இரு கைகளையும் தூக்கி “ஆத்தா..” என்று முணுமுணுத்து நின்றதைப் பார்த்து நான் சிலிர்த்துப் போய் நின்ற நொடியில், நாத்திகவாதியில் இருந்து அஞ்ஞானவாதியாக மாற என் மனம் நினைத்தது என்னவோ உண்மை.
அம்மா ஊரில் இருக்கும் மாரியம்மன் கோயில் பொங்கலுக்கு, இந்தளவிற்கு மனம் ஏங்கியதில்லை. ஒரு வேளை, ஒவ்வொரு பொங்கலுக்கும் சாமி செய்யும் வழக்கம் இல்லாததால் அப்படித் தோன்றியிருக்கலாம். நடுராத்திரியில் மாரியம்மன் சப்பரத்தில் வரும் போது மட்டும் எழுந்து கும்பிட்டு விட்டு, படுத்துக் கொள்வது வழக்கம். காளியாத்தாளுக்கு வாய்த்ததை விட சற்று வசதியான சப்பரம், அந்த ஊர் மாரியாத்தாளுக்கு வாய்த்திருந்தது. ட்யூப்லைட், வெள்ளை சீரியல் பல்பு, தோரண அட்டைகள் என்று சற்று பாலிசாக இருக்கும். சிறு வயதில் – மாரியாத்தாளை விட, சப்பரத்தின் மேல் இருபுறமும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் அந்த பூனை பொம்மைகள் மேல் தான் எனக்கு அலாதி பிரியம். சப்பரத்தை அருகில் இருந்து பார்த்தாலும், மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலும், அந்த வெள்ளைப் பூனைகளைத் தான் கண்கள் தேடும்.
ஒருமுறை “ஏண்ணேன்…சப்பரத்தை எறக்கி வச்சப்புறமும், அந்தப் பூனை இப்டி தான் தலையை ஆட்டிட்டே இருக்குமா” என்று இசக்கி அண்ணனிடம் கேட்க,
“யேய்…புலிடா அது” என்றார்.
“அதான பாத்தேன்..மாரியாத்தாளுக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்” என்று மண்டையில் பல்பு எரிந்தது. சப்பரத்தில் வைக்க சின்ன சைஸில் புலி செய்யச் சொன்னால், அது பூனை போல வந்திருக்கிறது. அடித்த மஞ்சள் பெயிண்ட் சாயம் போகாமல் இருந்திருந்தால் கூட புலிக்குட்டி சாயலில் இருந்திருக்கும்.
மாரியாத்தாளை விட, அம்மா ஊரில் இருக்கும் முத்தையா கோயில்தான் மனதுக்கு அணுக்கம். ஒரு முறை மாட்டிற்கு வைத்திருந்த தவிட்டை எடுத்து வெல்லத்தோடு கலந்து சாப்பிட, அது நன்றாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கத்தில், தங்கச்சிகளுக்கும் அதை சப்ளை செய்தேன். மாமா வந்ததும்,
“இந்தப் பய தவுட தின்னுட்டுத் திரியுறான், என்னான்னு கேளு அருளு”, என்ற வெள்ளைப் பாட்டி வத்தி வைத்தார்கள். எந்த ரியாக்சனும் இல்லாமல், கைலியை மாற்றிக் கொண்டே,
“அந்தத் தொட்டில முருங்கைக்காய் கெடக்கும் எடுத்துட்டு வா” என்றார் அருள் மாமா.
எதுக்கு மட்ட மத்தியானத்துல முருங்கைக்காய் கேக்குறாய்ங்க என்ற யோசனையோடு, நல்லதண்ணித் தொட்டியில் ஊறப் போட்டிருந்த முருங்கைக்காய்களில், வாட்டமான இரண்டை எடுத்துச் சென்றேன். மாமா கையில் கொடுத்தவுடன், என் முதுகு பழுத்தது. அடுத்தடுத்த அடியில் இருந்து விலகி தப்பித்து ஓடினேன். வீட்டுக்குப் பின்னால் இருந்த மாட்டுப் பண்ணை, அதற்குப் பின்னால் இருந்த வைக்கப் படப்பை என்று நான் தெறித்து ஓடி, ஒளிந்த இடம் முத்தையா கோயில் தான். அதற்குப் பிறகு எப்போது ஒரண்டு இழுத்து விட்டு, அடிக்கு பயந்து தப்பித்து ஓடினாலும், அது தான் அடைக்கலம்.
கொத்தனாராக இருந்த ராசு மாமா முத்தையா கோயிலில் சாமியாடுவார். ஒரு முறை, முத்தையா கோயில் பொங்கலன்று அருள் வந்து சாமியாடியவர், வெறியேறி வேல்கம்பை நங் நங்கென்று ஓங்கி ஓங்கி தரையில் குத்தத் தொடங்கினார். இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் அவரைப் பிடித்து ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை. முத்தையா சிலையைப் பார்த்து கண்கள் கிறங்கிக் கொண்டே அல்லாடியவர், பற்களைக் கடித்தபடி வேல்கம்பை மறுபடி ஓங்கி இறக்க, அது சரியாக அவரது வலது கால் பெருவிரலில் இறங்கியது. ரத்தம் கொப்பளிக்க, எந்தச் சலனமும் இல்லாமல் நாக்கைத் துருத்திக் கொண்டு அவர் தொடரந்து ஆடியது இப்போது தான் நிகழ்ந்தது போல் நினைவிருக்கிறது. அவரது முகத்தில் இருந்த உக்கிரத்தையும், முத்தையா சாமியையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் தெற்றுப் பல் தெரிய சிரித்தபடி பேசும் ராசு மாமாவா இது என்று அரண்டு போயிருந்தேன். அதன் பின்னர் முத்தையா கோயிலில் நான் ஒளிந்ததேயில்லை.
இருபது ஆண்டுகள் கழித்து ஒரு வீடு கட்டும் விசயமாக அவரைப் பார்த்த போது, முதலில் என் கண்கள் சென்றது அவரது வலது கால் பெருவிரலை நோக்கித் தான்.
பாதி பிளந்த நகமும், தழும்புமாய் இருந்த பெருவிரலைக் காட்டி,
“இது முத்தையா கோயில்ல சாமியாடும் போது, வந்தது தான மாமா” என்றேன்.
“என்னய்யா..இப்புடி யாவம் வச்சிருக்க” என்றார்.
அவருக்குத் தெரியாது, சாமி மேல் எளியவர்கள் வைத்திருக்கும் பற்று இப்டி தான் வெளிப்படும் என்று என் மனதில் ஆழப்பதித்த நிகழ்வின் மையப்புள்ளி அவர்தான் என்று.
ராசு மாமாவும், நச்சாடலிங்கம் தாத்தாவும் வெளிப்படுத்திய உணர்வுகளை வெறும் பக்தி என்று சுருக்கிவிட மனம் ஒப்பவில்லை. சாமியின் மேல் இருக்கும் அத்தனை அன்பும், ஆங்காரமாய், அழுகையாய் வெளிப்படுவதற்கு, பக்தியைத் தாண்டி ஒரு உரிமையும் பெருமிதமும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நண்பர்கள் அவரவர் ஊர்த் திருவிழாக்களைப் பற்றிப் பேசும் பொழுது “இது எங்க சாமி” என்ற பெருமிதத்தை அவர்கள் கண்களில் பார்த்திருக்கிறேன். பால்யம் தாண்டி, இளவட்டத்தில் சிறிது சிறிதாக கடவுள் என்கிற சித்தாந்தத்தின் மேல் கோபம் வந்து, பின்னர் நம்பிக்கை இழந்த போதும், ஊர்ச்சாமிகளின் மேல் இருக்கும் அன்பு குறையவில்லை. இன்று வரையில், காளியாத்தாளைக் காண ஒவ்வொரு முறை அப்பா ஊருக்குச் செல்வது மனதுக்கு உகந்த நிகழ்வாகவே இருந்திருக்கின்றது.
“பேசாம மெட்ராஸ்லயே செட்டில் ஆயிரலாமான்னு யோசிக்கிறேன் மாப்ள” என்று நண்பன் ரஜப்-இடம் ஒரு நாள் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். பதறிப் போய்,
“மாப்ள..அந்தத் தப்பை மட்டும் செஞ்சுராத மாப்ள. ஊர விட்டு வந்தாலும் வேர விட்டு வரக்கூடாதுன்னு சமுத்திரக்கனி ஒரு படத்துல சொல்லுவாப்ல. என்னா படம்னு தெர்ல. அது என்னமோ அது மட்டும் மனசுல பதிஞ்சிருச்சு. ஊர விடணும்னு நெனைச்சிராத” என்றான்.
எளிய மக்கள் தங்கள் சாமிகளின் மீது கொண்டுள்ள பெருமிதமும், உரிமையும் தான் உறவுகளோடு பின்னி, வேர்களாகப் மாறி நம்மை சொந்த ஊரோடு பிணைத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். பெருமிதத்தின் அடிப்படையான அந்த உரிமை பறிக்கப்படும் போது, சாமி அந்நியமாக்கப்பட்டு, மொத்த உணர்வுக் குவியலும் பக்தி என்ற சொல்லுக்குள் சுருங்கி, நிறுவனமயமாகிவிடுகிறது. நிறுவனமயமாக்கப்படும் எதுவும் மக்களால் கேள்விக்குள்ளாக்கப்படும். கேள்வி கேட்பவர்களை நிறுவனங்கள் ஒதுக்கி வைக்கும். பின்னர், அது எங்கே போய் நிற்கும் என்று நமக்குத் தெரியும்.
எத்தனை கேடு தேடி வந்தாலும், சமாளித்து மேடேறும் தெம்பைத் தர நம்மோடு ஊர்ச்சாமிகள் இருக்கும் போது, வேறெதுவும் நமக்குத் தேவையில்லை. தவிர – காளியம்மன்களை, மாரியம்மன்களை, கொத்தாள வீரய்யன்களை, சுடலைமாடன்களை, அய்யனார்களை முழுதாகச் செரித்து விட எத்தனித்தாலும், அதற்கான வலு நிறுவனங்களுக்கு ஒரு போதும் வாய்க்கப் போவதில்லை.
தமிழ்

@TNFloodmodeller Team, could you analyse new proposed Paranthur airport, since there is some apprehension about this site
English

@TNFloodmodeller Good initiative, should try to improve and give more updates.
English

On November 29, 2024, we issued our first flood forecast for Velachery, focusing on street-level flood
We’ve developed IROMS-2D, one of the most efficient flood models in the world, and it’s India’s very own.
If our model had been ready during the 2015 floods, it could have helped save lives and reduce panic among people.
(Konjam over ahh pesara maathiri irukka, ini vara years la thaan tharamana sambavame irukku kandippa paapinga makkale 😍😍😍)
Tamil Nadu Flood Modellers@TNFloodmodeller
🌧️Velachery Flood Update for 30.11.24: Mild Caution! 🌧️ Velachery residents, please stay cautious, especially near the Velachery Railway Station! Heavy rainfall may cause waterlogging in areas like backside of Velachery, Anna Nagar Extension, VGP Selva Nagar, and Baby Nagar. There's no need to panic, but please be careful while traveling. Stay alert and prioritize your safety. 🌦️Any flooding is expected to be temporary! 🌦️ #Velachery #RainUpdate #StaySafe #ChennaiRains Disclaimer: This simulation is based on forecasted rainfall; actual outcomes may vary depending on observed rainfall
English
ss retweetou

The rains have a special liking to North Chennai this monsoon season again. From 8.30 am today North and North West Chennai got the bulk of rains. More clouds moving into North Chennai. A Century possible in Manali-Madhavaram belt.
Nothing much in central and south Chennai mostly ranging around 20 mm mark after 8.30 am today.

English

@Tr_Gayathri I think our state is still not matured for liberal or decent politics. Our CM tried very hard to change the political environment with his good gestures but looks like the opposition parties don't deserve such good gestures.
English

It's annoying to hear Premalatha Vijayakanth stoop to body-shaming our Honorable CM of Tamil Nadu. As a public figure and a politician, you should maintain dignity & respect in your words. Focus on constructive criticism, not personal attacks, elevate the discourse! #ShameonYou
English

❤️ Data Science
💜 Python
🖤 Artificial Intelligence
🤍 AWS Certified
🧡 Cloud
💛BIG DATA
💚 Data Analytics
🤎 MBA
💖 Machine Learning
❤️🔥 Ethical Hacking
𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐬𝐭 𝐩𝐚𝐫𝐭? 𝐈𝐭'𝐬 𝐚𝐥𝐥 𝐚𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞𝐥𝐲 𝐅𝐑𝐄𝐄 𝐨𝐟 𝐜𝐨𝐬𝐭!🚀
𝐄𝐚𝐬𝐲 𝐬𝐭𝐞𝐩𝐬 to grab your share:
1. Follow @therjrajesh (So I can DM you)
2. Like and Repost ❤️
3. Comment "Share" for your complimentary copies! 📚

English

@ChennaiRmc Very useful to get correct information on critical time. Thanks to IMD
English










