Schrödinger’s Cat 🐈⬛ đã retweet

*திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்குத் தடை!*
*தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை-கருத்துரிமைக்கு ‘மேலிட உத்தரவால்' தடையா?*
*TNDJU துணைத்தலைவர், ஊடகவியலாளர் தவம் ஆவணப்படத் திரையிடலை “மேலிட உத்தரவு” என்று தடுத்த தமிழ்நாடு காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.*
சமகாலத்தில் மதநல்லிணக்கத்திற்கு வந்த அச்சுறுத்தலையொட்டி ஊடகவியலாளர் ‘அறக்கலகம்' தவம் அவர்கள் திரு. தமிழ்தாசன் அவர்களோடு இணைந்து தயாரித்து இயக்கிய மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் “திருப்பரங்குன்றம் Files” என்ற ஆவணப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் வெளியிட்டு, திரையிடல் நிகழ்வுகளும் நடைபெற்றது. அப்போது மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து இன்னும் சில திரையிடல்களும் நடைபெற்றன.
அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட அந்த திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்தை புதுக்கோட்டையில் இன்று (31 மே) திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் வீதி கலை இலக்கியக் களம் அமைப்பினர். ஆனால், நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தனியார் அரங்கத்துக்கு வந்த காவல்துறையினர் அதை நடத்தக் கூடாது எனத் தடுத்துள்ளனர். அரங்க உரிமையாளர்களுக்கு தொந்தரவு வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்திற்கு நிகழ்வை மாற்றியும் உள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் திரையிடல் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென அங்கும் காவல்துறையினர் வந்துள்ளனர். 'திரையிடக் கூடாது. மேலிட உத்தரவு' என்று கூறி நிகழ்ச்சியை தடுத்துள்ளனர்..
'இது ஏற்கெனவே வெளியிடப்பட்ட படம்தான். YouTube-ல் Cheral என்ற தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டு 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது ஒன்றும் ரகசிய நடவடிக்கை இல்லை. நீங்களும் வேண்டுமானால் அமர்ந்து பாருங்கள்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள். ஆனால் காவல்துறை கேட்கவில்லை. கடைசியில் ஆவணப்படத் திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2026 முதல் தேர்தலுக்கு முன்வரை பலமுறை இந்த ஆவணப்படத்தின் தனியார் திரையிடல் நடந்துள்ளது. எந்தச் சிக்கலும் எழுந்ததில்லை.. திரையிடல் கூடாது என்பதற்குக் காரணத்தை எழுத்துப் பூர்வமாகத் தரவும் மறுத்துள்ளனர். ‘புரிஞ்சுக்கோங்க சார், மேல இருந்து உத்தரவு' என்று காவல்துறை சொன்னதன் பொருள் என்ன? காவல்துறையின் இந்த அத்துமீறிய அராஜகத்தை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமை. அதனடிப்படையில் ஒரு கருத்தைப் பேசுவது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமை. இந்த உரிமைக்கும் கடமைக்கும் தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தடுக்கப்படுவதாக நமக்கு வெவ்வேறு தரப்பினரிட்ம் இருந்து புகார்கள் வருகின்றன. இதற்குத் தமிழ்நாடு அரசின் பதில் என்ன?
ஒரு தனியார் அரங்கில் சிலர் கூடி ஒரு நிகழ்ச்சி நடத்த அரங்க உரிமையாளர் தவிர யாரிடமும் எந்த உத்தரவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதனைத் தடுக்க காவல்துறையை அனுப்பியது யார்? இந்த மறுப்பை எழுத்துப் பூர்வமாகக் கொடுக்காமல் அராஜகமான முறையில் அரங்கில் நுழைந்து தடுத்ததன் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு விளக்கம் அளித்தே ஆக வேண்டும்.
- தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம்
Tamil Nadu Digital Journalists Union
தொடர்புக்கு: tndjumail@gmail

தமிழ்






















