மாயவரத்தான்@mayavarathaan
பெரும்பாலும் நம் தமிழகத்தில் அடையாள அட்டைகளில் பெயர் கொடுக்கும் போது ஒரு குழப்பம் வரும்.
என் பெயரை வைத்தே உதாரணத்தைச் சொல்கிறேன். இதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்றாலும் அடிக்கடி எழுதுவது பலருக்கும் உதவும் என்பதால்தான்.
என் பெயர் ரமேஷ்குமார். என் தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி.
கல்லூரியில் சேர்ந்த உடனேயே 1991-ம் ஆண்டு கடவுச்சீட்டு எடுக்கச் சென்ற போது (அப்போதெல்லாம் இணைய வழி விண்ணப்பம் கிடையாது), தனியார் முகவர் என் பெயரை கிருஷ்ணமூர்த்தி ரமேஷ்குமார் என்று விண்ணப்பத்தில் எழுதிக் கொடுத்து விட்டார்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பள்ளிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் கி. ரமேஷ் குமார் என்று இருந்தது. அவற்றைத் தவிர கடவுச்சீட்டுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ முதல் அரசு ஆவணம். ஆமாம்.. அப்போதெல்லாம் ஆதார் கிடையாது. சைக்கிள்தான் ஓட்டினேன். எனவே வாகன ஓட்டுநர் உரிமம் கிடையாது. அப்பா, அம்மா, தங்கைகள் பெயருடன் கூடிய ரேஷன் அட்டையில் ரமேஷ்குமார் என்று பெயர் இருந்தது. பான் கார்டெல்லாம் விண்ணப்பித்து எடுப்பதெல்லாம் அப்போது என்னவென்றே தெரியாது.
அதன் பிறகு வெளிநாடுகள் சென்ற போதெல்லாம் கடவுச்சீட்டைப் பார்த்து விட்டு என்னை ‘கிருஷ்ணமூர்த்தி’ என்றுதான் அழைப்பார்கள்.
ஆச்சா.. பிறகு 2011-ம் ஆண்டு காலத்தில் வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துத் தாயகம் திரும்பி வசிக்க ஆரம்பித்த காலத்தில் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது.
ஆதார் அப்போது கட்டாயமாக்கப்படவில்லை. அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்தேன். அதில் Ramesh Kumar K என்று பெயர் வந்தது. அதை வைத்து வங்கிக் கணக்குகள் தொடங்கினேன். பான் கார்டு எடுத்த போது அதில் RAMESHKUMAR KRISHNAMURTHY என்று வந்தது. பிறகு ஆதார் எடுத்த போது அதிலும் RAMESHKUMAR KRISHNAMURTHY என்று எடுத்திருந்தேன். ஆதார் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து எடுத்தாலும் அதில் RAMESHKUMAR என்று மட்டும் வந்தது.
இத்தனை காலம் எந்தப் பிரச்னையும் இல்லை.
அண்மையில் SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் செய்யப்பட்ட போது இணையம் வழியே சரி பார்க்கச் சென்ற போது எனக்கு செய்ய முடியவில்லை. என்னவென்று பார்த்தால் surname இல்லாத அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரு hyphen - போட்டுத் தொலைத்திருந்திருக்கிறார்கள். எனவே இணையம் வழியே சரிபார்க்கும் போது ஆதாரில் உள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒத்துப் போகவில்லை என்று நிராகரிக்கப்பட்டது. பிறகு நேரடியாக தேர்தல் பகுதி அலுவலரைச் சந்தித்து விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தேன்.
அதன் பிறகு வீடு குடி மாறிய போது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்திலும் முகவரி மாற்றத்திற்குச் சென்ற போதுதான் பிரச்னை தொடங்கியது.
இணையம் வழி மாற்றம் உள்ள இடங்களில் எல்லாம் ஆதாரிலும் அவர்களிடம் பதிவு செய்துள்ள பெயரும் ஒன்று போல இருக்க வேண்டும் என்றனர். அதற்கு முதலில் ஆதாரில் இணையம் வழி பெயர் மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று ஆரம்பித்தேன். பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்த ஆவணம் இருந்தாலும் சரி என்று கூறப்பட்டிருந்தது. நானும் வாடகை ஒப்பந்த ஆவணத்தை 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாங்கி அதை வைத்து ஆதார் இணைய தளத்தில் ரூ. 75 செலுத்தி விண்ணப்பித்தேன். இரண்டாவது நாளே நிராகரிக்கப்பட்டதாகக் குறுந்தகவல் வந்தது. Document mismatch என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் என்ன பிரச்னை என்று இல்லை. ஆதாரில் RAMESHKUMAR KRISHNAMURTHY. வாடகை ஒப்பந்தத்தில் Rameshkumar K. எனவே நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் காரணம் சொல்லப்படவில்லை. இத்தனைக்கும் ஆவண சரிபார்ப்பை பெங்களூருவில் கணினி தானியங்கி சரிபார்ப்பின்றி manual ஆகத்தான் செய்கிறார்கள்.
சரி என்று நான் HP Gas அலுவலகம் சென்று முகவரி மாற்றம் விண்ணப்பித்து வாங்கி வந்தேன். அங்கே வாடகை ஒப்பந்த நகல் கொடுத்தேன். சில நிமிடங்களில் மாற்றித் தந்தனர். அப்படி வாடகை ஒப்பந்தம் இல்லையென்றால் நோட்டரி அஃபிடவிட் மூலம் மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் செலவு. பிறகு கேஸ் பில் மூலம் மீண்டும் ரூ. 75 செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தேன். கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இப்போதும் காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் காரணம் அதேதான்.. ஆதாரில் முழுமையாக இருந்த பெயர் கேஸ் பில்லில் இனிஷியலோடு இருந்ததுதான்.
உள்ளூர் ஆதார் ஈசேவை மையம் சென்றேன். நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டும்தான் ஆதார் சேவை செய்யப்படுமாம். அதுவும் காலையிலேயே போய் வரிசையில் ஓரிரு மணி நேரங்கள் நின்று பெயர் கொடுத்து விட்டு பிறகு சில மணி நேரங்களுக்குப் பிறகு செல்ல வேண்டுமாம். சிங்காநல்லூர் மாநகராட்சி அலுவலகத்தில் 10.30 மணிக்கு அவர்கள் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே 100 பேர் வரை நிற்கிறார்கள். இதுவும் சரி வராது என்பதால் மீண்டும் HP Gas நிறுவனத்திடமே சென்றேன். அவர்களிடம் சென்று Ramesh Kumar K என்று இருந்த பெயரை Rameshkumar Krishnamurthy என்று மாற்றி வாங்கி வந்தேன். பெயர் மாற்றம் நிகழ இரண்டு நாட்கள் ஆனது. பிறகு அங்கேயே ஒரு சிலிண்டர் புக் செய்து உடனே கேன்சல் செய்து விட்டேன். (அப்போது எனக்கு சிலிண்டர் தேவைப்படவில்லை. புக் செய்த ரசீது மட்டுமே தேவை). அதை வைத்து மீண்டும் ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய ரூ. 75 செலுத்தி இணையம் வழியே விண்ணப்பித்தேன். ஐந்து நாட்களில் முகவரி மாற்றம் நிகழ்ந்தது.
பிறகு என் ஆதார் அட்டை விபரங்களை வைத்து வீட்டம்மா, மகன்களுக்கும் முகவரி மாற்றம் தலா ரூ. 75 செலுத்தி இணையம் வழியே விண்ணப்பித்தேன். உடனேயே மாற்றம் நடந்தது. ஆனால் முகவரியில் அவர்கள் பெயருக்குக் கீழே C/o Rameshkumar Krishnamurthy என்று உள்ளது. அது அப்படித்தான் வருமாம் - என்னுடைய ஆதார் அட்டையை வைத்துத் திருத்தியதால். இதில் இன்னொரு இம்சையும் நிகழந்திருக்கிறது.. ஏற்கனவே ஆதார் எடுத்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பதைத் தமிழில் கிருஷ்ணமூர்த்த் என்று அச்சடித்து அதன் பிறகு தியில் வரும் கொம்பை அச்சடித்திருக்கின்றனர். தி என்பது சேர்ந்து இல்லாமல் த்+இ என்று வந்து தொலைத்திருக்கிறது. பொதுவாக ஆதார் மையத்தில் அனைத்தையும் தட்டச்சி விட்டு கணினியில் நம்மிடம் காட்டி விட்டுத்தான் சமர்ப்பிப்பார்கள். ஆனால் சிங்காநல்லூர் மையத்தில் அப்படிச் செய்யவில்லை. இப்போது அதைத் திருத்த வேண்டுமென்றால் மீண்டும் அவர்களிடம் போய் தொங்க வேண்டுமாம்.
இதை வைத்து வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்யப் போனேன். ஆனால் அதில் Surname என்ற இடத்தில் கோடு போட்டு வைத்ததால் மாற்ற முடியவில்லை. BLO-வை நேரில் சந்தித்து மாற்ற வேண்டும் என்றனர்.
இணையம் வழியே புகார் அனுப்பினேன். ஆதார் வழியாகத்தான் முன்பு வாக்காளர் அடையாள அட்டையே எடுத்திருக்கிறேன். ஒன்று அதில் உள்ளது போல என் பெயரை முழுதும் போடுங்கள். அல்லது surname என்று உள்ளதில் கோடு போட்டு வைத்திருப்பதை எடுத்துத் தொலையுங்கள் என்று. ஓரிரு நாட்களிலேயே நீங்கள் இணையம் வழியே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தகவல் வந்தது. செய்தேன். நான்கைந்து நாட்களிலேயே அதிலும் பெயர் மாற்றம் நிகழ்ந்து விட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டையில் என் பெயர் Rameshkumar + Surname Krishnamurthy என்று உள்ளது.
என் அனுபவத்தில் ஆதாரில் பெயர் கொடுக்கும் போது first name, last name/surname என்று இருப்பதில் நம் பெயரில் இரண்டு பாகங்களாக இருந்தால் பிரித்துக் கொடுப்பது நல்லது. First Name : Ramesh, Surname : Kumar
தந்தை பெயர் : Krishnamurthy
எனவே அனைத்து ஆவணங்களிலும் என் பெயர் Ramesh Kumar என்று மட்டும் இருக்கும். இனிஷியல் என்பதெல்லாம் தேவையில்லை. தந்தை பெயர் என்று இருக்கும் இடத்தில் கூட கிருஷ்ணமூர்த்தி என்று மட்டுமே கொடுப்பது நல்லது. கிருஷ்ணமூர்த்தி. எஸ் என்று அவர் இனிஷியலைச் சேர்க்கத் தேவையில்லை.
அப்படி நம் பெயர் இரண்டாக இல்லை என்றால்.. ரமேஷ் என்று மட்டும் இருந்தால் First Name Ramesh, Lastname / Surname Krishnamurthy என்று கொடுத்து விடலாம்.
இதில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு Surname என்ற இடத்தில் ஏற்கன்வே தந்தை பெயர் இருந்தால், ***அவர்கள் விருப்பப்பட்டால்*** கணவரின் பெயரை போட்டுக் கொள்ளலாம். அதற்கு கெஸட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அல்லது அதை அப்படியே விட்டு விட்டு தந்தை பெயர் / கணவர் பெயர் என்று கேட்கும் இடங்களில் கணவர் பெயரைக் கொடுத்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பம். ஆனால் எப்படிச் செய்தாலும் அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரி செய்து வைத்துக் கொள்வது நல்லது.
நான் மேலே குறிப்பிட்டிருப்பது மிகப் பெரும்பாலும் என் வயது ஒத்த பலருக்கு நடந்திருக்கக்கூடிய / நடக்கும் அனுபவங்களாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் ஆரம்பத்திலேயே ஆதார் எடுத்து விடுவதாலும், பெரும்பாலும் அதை வைத்து இதர அடையாள அட்டைகள் விண்ணப்பிப்பதாலும் பிரச்னை எழ வாய்ப்பில்லை.
முக்கியக் குறிப்பு : இது என் அனுபவப் பகிர்வு மட்டுமே. நான் ஒரு சட்ட ஆலோசகர் இல்லை. எனவே இது போன்ற விஷயங்களில் நீங்கள் உங்கள் கணக்குத் தணிக்கையாளர் / சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படவும்.