
முதல்வர் விஜய் ஏதோ எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டாரோ என்று தான் தோன்றுகிறது. உண்மையிலே விஜய் எதிர்ப்பார்த்த வெற்றி என்பது 2031 ல் தான்.ஆனால் இந்த வெற்றி என்பது அவரே எதிர்ப்பாராத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக விஜய் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாதவை என்று அவருக்கே நன்றாக தெரியும். இருந்தும் திராவிட கட்சிகளுக்கு செக் வைப்பதற்க்காக தான் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்றெல்லாம் மனம் போன போக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து விட்டார்.ஏனென்றால் திமுக 2021ல் அறித்த வாக்குறுதிகளையே அவர்கள் நிறைவேற்ற முடியாமல் தாளம் போட்டுக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். இத்தனைக்கும் திமுக 2021 ல் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விஜயின் 2026 தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. உதாரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திமுக அறிவித்தது அதையே விஜய் அவர்கள் 2500 என்று அறிவித்தார். இப்பொழுது இருக்கும் நிதி நெருக்கடியில் விஜய் அவர்கள் அறிவித்த 2500 சாத்தியப்படுமா என்பதே அனைவரும் யோசிக்கும் விஷயம். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் மாநில கட்சிகள் மட்டுமே ஓரளவுக்கு நிதி நெருக்கடியை சமாளித்து ஆட்சி நடத்த முடியும் மாறாக முரண்டு பிடித்தோ அல்லது எதிர்த்தோ பயணித்தால் பாதிக்கப்படுவது மாநில அரசுதான். குறிப்பாக தமிழக அரசு இன்றைக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் மத்திய அரசோடு முரண்பட்டு இருந்தால் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியப்படுமா? இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் செய்த முதல் தவறு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது தான். ஏற்கனவே அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவிற்கு இது பெரும் கோபத்தை வரவழைத்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் திமுக அதிமுக இரண்டையும் இணைத்து விஜய்க்கு எதிராக ஆட்சி அமைக்க மிகப்பெரிய ஒரு திட்டத்தை பாஜக அரங்கேற்றியது.அது ஏனோ இறுதியில் ஒரு சில காரணங்களால் முடிவு எட்டப்படாமல் கைவிட்டு போனது. விஜய் செய்த இரண்டாவது தவறு அதிமுகவை உடைத்து சி.வி சண்முகம் எஸ்பி வேலுமணி மூலமாக எம்எல்ஏக்களை தவெக விற்கு கொண்டுவர முயற்சித்தது. உண்மையிலேயே இந்த விஷயம் முதன்முதலாக அரசியலுக்கு அடி எடுத்து வைக்கும் விஜய்க்கு இது பெருத்த அவமானத்தைஉண்டாக்கும் செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. திமுக அதிமுகவிற்கு மாற்று என்று சொல்லப்படுகின்ற விஜய் அவர்களுடைய அரசியல் ஆரம்பத்திலேயே குதிரை பேரதிற்கும்,கட்சிகளை உடைத்து அதிலிருந்து ஆட்களை பிரிப்பதும் என செயல்பட்டதால் திராவிட கட்சிகளுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பது போல் தான் அமைந்துவிட்டது. மக்களும் அதை பரவலாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்கும் வகையில் தீவிரமாக இனி செயல்படும். திமுகவை பொருத்தவரை பாஜக எதிரி என்றால் காங்கிரஸ் துரோகி. ஆதனால் துரோகியை ஒழிக்க எதிரியுடன் கைகோர்ப்பதில் தவறு இல்லை என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக இனி அடுத்த 6 மாதத்திற்குள் ஆட்சி கலைப்பிற்கு உண்டான அனைத்து வேலைகளையும் திமுகவும், பாஜகவும் திரை மறைவில் சேர்ந்தே நடத்தும். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..
















